நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆலயத்துக்கு வந்த யுவதி ஒருவருக்கு தனது அலைபேசி இலக்கத்தைக் கொடுத்து சிக்கினார்

271

நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆலயத்துக்கு வந்த யுவதி ஒருவருக்கு தனது அலைபேசி இலக்கத்தைக் கொடுத்து உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்ட சம்பவம்,நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்காக ஆலயசூழலில் 750 பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையிலும், பொலிஸ் சீருடையிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறே, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் ஆலய வெளிவீதி தரிசனத்தில் ஈடுபட்டிருந்த யுவதியிடம் தனது அலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுத்து, தனக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு கூறியுள்ளார்.

மேற்படி நபர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதை அறிந்திராக குறித்த யுவதி, அருகிலிருந்த பொலிஸ் காவலரனில் இது தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டு அலுவலகத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபருக்கு அழைப்பினை ஏற்படுத்திப் பார்த்த போது அது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் எனத் தெரியவந்தது. மேலதிக அதிகாரிகளுக்கு இவ் விடயம் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து இந்தத் தகாத நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த உத்தியோகத்தர் கடமை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE