கடந்த அரசாங்கத்தினால் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளை தற்போது தமிழ் மக்களின் முழுமையான ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கைது செய்து வருகின்றது. நல் ஆட்சி என்னும் போர்வையில் முன்னர் இருந்ததுபோல் ஒரு கொடிய ஆட்சியையே இவ்வாரசாங்கமும் மேற்கொள்கிறதா.? என்ற சந்தேகம் எமக்குள் எற்பட்டுள்ளது. என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் (அமல்) அவர்கள் இன்று ஊடகங்களுக்கு வளங்கிய கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர்.,
தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு, அம்பாரை மாவட்ட முன்னாள் சிறப்புத்தளபதி ராம், முன்னாள் சார்ல்ஸ் அண்டனி படைப்பிரிவின் சிறப்புத்தளபதி நகுலன், திருகோணமலை மாவட்ட முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கலையரசன் ஆகியோரின் கைதுகள் தொடர்பாக இவ்வாரசாங்கத்தின் செயல்பாடுகள் மீது பாரிய விமர்சனங்களை எமது மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
முன்னறிவித்தல் இன்றிய கைதுகளும் கடத்திச் சென்று விசாரணைகளுக்கு உட்படுத்துவதும் ஒரு ஜனநாயக நாட்டிற்கு உரித்தான பண்புகள் அல்ல., அதுவும் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் மீண்டும் கைது செய்து விசாரணைகள் என்ற பெயரில் அழைத்துச்செல்வதால் இவர்களைப்போல் சமுகமயமாக்கப்பட்டுள்ள ஏனைய போராளிகள் மத்தியிலும் அவர்களை நம்பியிருக்கும் குடும்பத்தினர் மத்தியிலும் ஒரு விதமான அச்சத்தினை தோற்றுவித்துள்ளது.
சிறையிலே வாடுகின்ற 200க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தவுமே எமது மக்கள் இவ் அரசாங்கத்துக்கு முழுமையான வாக்குகளை அளித்தார்கள். அவர்களின் பொதுசன அபிப்பிராயத்தை மீறி இவ்வரசாங்கமானது செயற்பட்டு வருகின்றது.
அத்துடன் வெளிநாடுகளுக்கு சென்ற திரும்பும் இளைஞர்களையும் Prevention of Terrorism Act எனும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலமாகவும் இவ்வரசாங்கம் கைது செய்து வருகின்றது. புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களையும், உயிர் அச்சுரத்தல்களால் நாட்டைவிட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளவர்களையும் மீண்டும் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துக் கொண்டே மறுபுறம் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் ஓர் கைங்கரியத்தையும் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படும் இவ் அரசாங்கம் செய்து வருகின்றது.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு வரை நீடித்த யுத்தத்தில் இருந்து மீண்டு வந்து இன்று நிம்மதியாக வாழ முற்படும் எம் மக்களின் மத்தியில் இவ்வாறான உளவியல் அச்சுறுத்தல்களை விடுப்பதை இவ்வரசாங்கம் கைவிட வேண்டும். கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளான ராம், நகுலன், கலையரசன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் பலகாலமாக விடுதலை செய்வதகாக தொடர்ந்தும் சிறையில் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். இவ் அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டிருப்பதை விடுத்து அதை செயற்பாட்டளவில் காட்ட வேண்டும் . என்று மேலும் குறிப்பிட்டார்.