நாடாளுமன்றில் கேள்விகளுக்குப் பதில் தர அமைச்சர்கள் இல்லையா?! சபையில் சிறிதரன் எம்.பி. ஆவேசம்

306

நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் சபையில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதனர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படுமா என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியதுடன், அதற்கு இது நல்ல உதாரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி., மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை, ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் தனியார், அரசதுறை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து கருத்துகளை முன்வைத்தார். மேற்படி தரப்பினரின் சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதன்போது அமைச்சர் ஜோன் செனவிரட்ன சபையில் இல்லாத காரணத்தால் அதிருப்தியடைந்த சிறிதரன் எம்.பி., “இந்தச் சபையில் நாம் உரையாற்றும்போது எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பொறுப்பானவர்கள் இல்லை. வெறும் சபையைப் பார்த்துத்தான் நாம் பேசவேண்டி இருக்கின்றது. எமது பேச்சு ஹென்சார்ட் பதிவாக மட்டுமே இருக்கப்போகின்றது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படுமா என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்” என்று கோபமாகக் கருத்து வெளியிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, “அமைச்சர் (ஜோன் செனவிரட்ன) மதிய போசனத்துக்காக சென்றுள்ளார். இந்த விடயத்தை அவரின் கவனத்துக்குக் கொண்டு வருவேன்” – என்றார்.

SHARE