நாடெங்கிலுமுள்ள அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு!

236

நாடெங்கிலுமுள்ள பல வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இருதயநோய், சிறுநீரகநோய், நீரிழிவுநோய், புற்றுநோய், உயர் குருதி அழுத்தம், வாயுப்பிடிப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், வடமத்திய மாகாணத்தின் அநுராதபுர வைத்தியசாலைகளில் மாத்திரம் 21 ஆயிரம் சிறுநீரக நோயாளிகள் உள்ளனர் என்றும் அவர்களுக்கான ‘வன் எல்பா’ எனும் முக்கிய மருந்துக்கு கடந்த இரு மாதங்களாகத் தட்டுப்பாடு நிலவிவருவதாகவும் சுகாதார அமைச்சின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்த மருந்துத் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக சுகாதார அமைச்சின் மருந்துகள் விநியோகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் டாக்டர் கமல் ஜயசிங்கவை குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு மீண்டும் சேவையில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அமைச்சின் செயலாளர் அருண ஜயவிக்கிரமவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது நிலவும் மருந்துத் தட்டுப்பாடு பற்றி பரிசீலனை செய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அநுராதபுரம் மற்றும் பதவிய பிரதேச வைத்தியசாலைகளுக்கு நாளை விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

பின்வரும் அதிமுக்கிய மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Pazopanib, Novotaxel, Filg a Strim, Be Vacimnstine Lapatonib, Meg Ace, Mitotaue.

சுகாதார அமைச்சரின் பணிப்புரையின் கீழ் வடமத்திய மாகாணத்தின் சிறுநீரக நோயாளிகளுக்கான அத்தியாவசிய மருந்துகளை உடனடியாக விநியோகிக்குமாறு மருந்துகள் விநியோகப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் இன்னும் ஓரிரு தினங்களில் அவை விநியோகிக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்திருக்கிறார்.

Daily_News_4657818078995

SHARE