
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வளிக்கும் வகையில் இம்முறை வரவுசெலவு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
வரவுசெலவு 2016 இரண்டாம் நாள் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் இன்று கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஊழல் மோசடியை நிறுத்த விசேட சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டங்களை விடவும் இறுக்கமான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்நாட்டில் சில காலம் குடும்ப ஆட்சி நிலவியது. அனைத்தும் குடும்ப அங்கத்தினரால் தீர்மானிக்கப்பட்டது. இன்று இலங்கையில் சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து பலம் மிக்க அரசாக மாறியுள்ளது.
நாட்டில் நல்லாட்சிக்காக தத்தமது கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு செயற்படவேண்டியது அவசியம்.
முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக அமைந்தாலும் கூட வீண் விரயம், அதிக செலவீனம் என்பவற்றை ஆழமாக ஆராய வேண்டும்.
இவ்வீண் விரயத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.