நாட்டைப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள்: சம்பந்தன் சிங்களத்தில் பேட்டி

334

 பாராளுமன்றில் இன்றையதினம் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமது கட்சி நாட்டைப் பிரிப்பதற்கு எதிரானது என்று இன்று பீ.பீ.சி சிங்கள சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

sampanthan-400-seithy3

வடக்கு, கிழக்கில் 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினை கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீளவும் பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றின்ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருப்பெற்றிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனத்தின் பின்னர் சிங்கள சந்தேஷிய சேவைக்கு அவர் வழங்கியுள்ள பிரத்தியேக பேட்டியில் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் போன்றே தான் செயற்படவிருப்பதாகவும் இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

சிங்கள மக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன எனக் கேட்டதற்குப் பதிலளித்துள்ள அவர்:

“சிங்கள மக்களைப் பொறுத்தவரை ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் அனைத்து வேலைகளையும் நான் செய்வேன்.

“ஒருபோதும் நாட்டைப் பிரிக்க மாட்டேன். நாட்டைப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள். எங்களுக்கு அதில் விருப்பமில்லை. நாட்டைப் பிரிக்கும் கதையே தேவையில்லை. நாட்டைப் பிரிக்கும் கதையை முற்றுமுழுதாக விட்டுவிடலாம்,” என்று ஐயம் திரிபறத் தெரிவித்திருக்கிறார்.

இந்த அரசிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் தீர்வு என்ன எனக் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்துள்ள திரு சம்பந்தன்:

“இப்பிரச்சனைக்கு நல்ல தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும். எல்லோரும் ஒன்றாக இருக்ககூடிய தீர்வு எத்தகைய தீர்வாவது கொண்டுவரப்பட வேண்டும்,” என்று தெரிவித்திருக்கிறார்.

SHARE