நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என வட மாகாணத்திற்கான புதிய ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
அண்மையில் வட மாகாணத்திற்கான புதிய ஆளுனராக பதவியேற்ற ரெஜினோல்ட் குரே நேற்றைய தினம் கச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாவில் கலந்துக் கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய ஆளுனர் பதவியேற்று கலந்து கொள்ளும் முதல் உற்சவம் இதுவென்பதோடு, இந்த உற்சவத்தின் போது தமிழ் மொழியிலேயே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை விஷேட அம்சமாகும்.
மேலும் வடமாகாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் ஆளுனரிடம் எமது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு இன்னும் 6 மாதத்திற்குள் அனைத்து காணிகளும் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவித்த ஆளுனர்,
இதற்கான உறுதி மொழியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் வழங்கியள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் கச்சதீவுப் பிரதேசத்தில் பூரணப்படுத்தப்பட்ட அந்தோனியார் ஆலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என வட மாகாண மறைமாவட்ட ஆண்டகை பெனடிக் ஞானப்பிரகாசம் அவர்கள் கோரிக்கை விடுத்தைமையை அடுத்து அடுத்த வருடத்திற்குள் ஆலயத்தை அமைத்து தருவதாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.