தற்போது நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருப்பதற்கு அஷ்வின், ஜடேஜா என இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்கள் தான் காரணம்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் விஜய், புஜாரா ஆகியோரின் நிதான ஆட்டத்தாலும், ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தாலும் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 318 ஓட்டங்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து அடுத்து துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 1 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
இதனால் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட அதிக ஓட்டஙகள் குவித்துவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
நியூசிலாந்து அணியின் இந்த எதிர்பார்ப்பை அஸ்வின் உடைத்தார். இந்திய அணிக்கு பெரிதும் தலைவலியாக இருந்த நியூசிலாந்து வீரர் லாதம்மை எல்பிடபில்யூ முறையிலும், கனெ வில்லியம்ஸை போல்ட் என இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றினார்.
இதற்கு சற்றும் சளைக்காத மற்றோரு சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா தன் பங்கிற்கு நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டெய்லரை எல்பிடபில்யூ முறையில் வெளியேற்றினார்.
அதற்கு அடுத்த படியாக ரோன்சி, கிரையாக், சுதி , போல்ட் என அனைவரையும் தன்னுடைய நேர்த்தியான பந்து வீச்சால் பெவலியன் அனுப்பினார்.
நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸின் கடைசி விக்கெட்டை அஸ்வின் வீழ்த்த அந்த அணி 262 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா 5 விக்கெட்டும், யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
56 ஓட்டங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 377 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதில் முதல் இன்னிங்ஸ், இரண்டாவது இன்னிங்ஸ் என இரண்டையும் சேர்த்து இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு 434 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க தடுமாறிக்கொண்டு ஆடி வருகிறது. இதனால் இந்திய அணி விளையாடும் இந்த 500-வது சாதனை டெஸ்ட் ஆட்டத்தில் இமாலய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.