முல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக திருகோணமலைக்கு கடத்தி கொண்டுவரப்பட்ட 140 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நிலாவெளி பிரதேசத்தில் இன்று(14) அதிகாலை 2 மணியளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின் பொலிஸ் குழு ஒன்று குறித்த பிரதேசத்தில் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது குறித்தளவு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சுற்றிவளைப்பு குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற உதவி பொலிஸ் பரிசோதகர் ரத்னநாயக்க தெரிவிக்கையில்,
முல்லைத்தீவிலிருந்து கடல் மார்க்கமாக ஒரு தொகை கஞ்சா கடத்தி வருவதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து குறித்த பிரதேசத்தில் பொலிஸ் குழுவொன்று மறைந்திருந்தது.
அவ்வாறு மறைந்திருந்த வேளையில் அவ்வழியாக பயணித்த வானொன்றை வழிமறித்து சோதனை நடத்தியது.
அந்த வானில் மூவர் இருந்ததுடன் வானிலிருந்து 140 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர்கள் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கஞ்சா முல்லைத்தீவில் இருந்து படகொன்றில் கொண்டுவரப்பட்டு நிலாவெளி கடற்கரையில் இறக்கப்பட்டு அங்கிருந்து வான் ஒன்றில் ஏற்றிவரப்பட்டது.
திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் சந்திரக்குமாரவின் தலைமையின் கீழ் இம் மாவட்டத்தில் குற்றச் செயல்களை முற்றாக ஒழிப்பதற்கு மேற்கொண்டுவரும் பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியென்றும் அவர் தெரிவித்தார்.