நீட் தேர்வு தேவையா? என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்-ராகுல் காந்தி

203

நீட் தேர்வு தேவையா? என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். மாநில அரசு வேண்டாம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி மேலும் தெரிவித்ததாவது,

“கருணாநிதி என்பவர் சாதாரண மனிதர் அல்ல.  தமிழர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தவர் கருணாநிதி. ஆனால் அவரது நல்லடக்கத்திற்கு இடம் தராமல் தமிழக அரசு கருணாநிதியை அவமானப்படுத்தியது.

இதன் மூலம் தமிழர்களையே அவமானப்படுத்தியதாக கருதுகிறேன். மக்களின் குரலை கேட்கிறோம். கருத்து பரிமாற்றத்தை ஏற்கிறோம். ஆனால் மோடி அரசு, எதிர்த்தரப்பின் குரலை ஒடுக்கவே விரும்பும்.

உதாரணமாக ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு நாட்டின் பொருளாதாரத்தையே அழிக்க வேண்டும் என்று முடிவெடுத்து, 500 மற்றும் 1,000 ரூபா நாணயத்தாள்களை  செல்லாது என்று அறிவித்தார். பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி அவர் யாரிடமாவது கருத்து கேட்டாரா? பன்னிரண்டு வயது குழந்தையிடம் கேட்டிருந்தாலும் அதற்கு பதில் கிடைத்திருக்கும்.

இது அழிவுக்கு வழிவகுக்கும் என்று அந்த குழந்தை பதில் சொல்லி இருக்கும். கோடிக்கணக்கான ரூபாவை அதானிக்கும், அம்பானிக்கும் கொடுப்பதையே விரும்புகிறார் மோடி. அதே பணத்தை நாங்கள் ஏழை குடும்பங்களுக்கு கொடுப்போம் என்கிறோம். நியாய் என்ற திட்டத்தை உருவாக்கி அறிவித்துள்ளோம். இதன் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபா உதவித் தொகையாக கிடைக்கும். வறுமைக்கு எதிராக சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்துவோம்.

தமிழகத்தில் நீட் தேர்வால் அனிதா என்ற பெண் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தமிழகத்தில் இன்னொரு அனிதா உருவாக விட மாட்டோம். நீட் தேர்வு தேவையா? இல்லையா? என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். மாநில அரசு வேண்டாம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்வோம்.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

SHARE