நீண்ட காலமாக விளக்கமறியலில் ஒரு சந்தேக நபர் இருக்கின்றார் என்ற காரணத்திற்காக அவசரமாக பிணை வழங்க முடியாது

294

 

யாழ் குடாநாட்டை பரபரப்படையச் செய்த அச்சுவேலி முக்கொலை வழக்கில் அவசரமாக பிணை வழங்க மேல் நீதிமன்றம் மறுப்பு முற்று முழுதான பிணை கட்டளை ஒத்தி வைப்பு

achchuveli

யாழ் குடாநாட்டை பெரும் பரபரப்படையச் செய்திருந்த அச்சுவேலி முக்கொலை வழக்கில் இரண்டு வருடங்களாக விளக்கமறியலில் இருந்து வரும் சந்தேக நபரை பிணையில் விட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விண்ணப்பம் மீது அவசரமாக முடிவெடுக்க முடியாது என கடந்த புதன்கிழமை யாழ் மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகளை நடத்திய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், இதுபற்றிய முற்று முழுதான பிணை கட்டளைக்கு 31.08.2016 அன்று திகதி குறித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

யாழ் குடாநாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய யாழ்ப்பாணம் அச்சுவேலியில் கதிரிப்பாய் என்ற இடத்தில், கடந்த 04.05.2014 ஆம் திகதி நித்தியானந்தன் அருள்நாயகி, நித்தியானந்தன் சுபாங்கன், யசோதரன் மதுஷா ஆகிய மூவரைக் கொலை செய்ததாக கோப்பாய் ஊரெழு மேற்கு அம்மன் கோவிலடியசை; சேர்ந்த சேர்ந்த பொன்னம்பலம் தனஞ்செயன் என்பவர் கைது செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் இருந்து வருகின்றார்.

இந்த கொலை வழக்கு சம்பந்தமான நீதவான் நீதிமன்ற விசாரணைகள் முடிவடைந்துள்ளன. ஆயினும் இந்த வழக்கின் சந்தேக நபராகிய பொன்னம்பலம் தனஞ்செயன் கட்நத இரண்டு வருடங்களாக விளக்கமறியலில் இருந்து வருகின்றார். எனவே அவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையை மேற்கொண்ட யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியிடம், 2 வருடங்களாக விளக்கமறியலில் இருப்பவரை மேலும் தாமதிக்காமல் உடன் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு விண்ணப்பம் செய்யப்பட்டது.

நீண்ட காலமாக விளக்கமறியலில் ஒரு சந்தேக நபர் இருக்கின்றார் என்ற காரணத்திற்காக அவசரமாக பிணை வழங்க முடியாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார். அத்துடன் இது ஒரு முக்கொலை வழக்கு என்பதால் பல சட்ட நடைமுறைகள் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்த மனு தொடர்பான குற்றச் செயலில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்தக் கொலைச் சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து, யாழ்ப்பாணம் குடாநாடு பெரும் பரபரப்படைந்தது. மக்கள் ஒருவித அச்ச நிலைக்கு உள்ளாகினார்கள்.

இவ்வாறு சமூகத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கி சமூகத்தின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்த இந்தச் சம்பவம் தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தையடுத்து, மேல் நீதிமன்ற நடைமுறைகளுக்கு இந்த வழக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், மூன்று பேரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் இரண்டு வருடங்களாக நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் இருந்து வருகின்றார். இந்த பிணை மனு தொடர்பான வழக்கில் இந்த விடயமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

எனவே, இந்த பிணை மனு மீது அவசரமாக இந்த நீதிமன்றம் முடிவுகளை மேற்கொள்ள முடியாது. பல விடயங்களை மன்று ஆராய்ந்து தீர்மானம் எடுக்க வேண்டியிருப்பதனால், இந்த பிணை மனு தொடர்பில் இந்த சந்தேக நபருக்கு பிணை வழங்கலாமா இல்லையா என்பது குறித்த முற்று முழுதான கட்டளை 31.08.2016 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்படுகின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

SHARE