நீதிபதி இளஞ்செழியன் நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்வித தளர்வினையும் ஏற்படுத்த கூடாது!

172
 

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமானது, அவரது நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்வித தளர்வினையும் ஏற்படுத்தக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக முயற்சி வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.

இந்தச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியன் இலக்கு வைக்கப்படவில்லை என்றவாறான செய்திகள் இதன் கடுமைத் தன்மையை இல்லாதாக்கி உண்மைகள் கண்டறியும் விடயத்தைத் திசைத் திருப்புவதாகவும் அமையலாம்.

இதன் உண்மையைக் கண்டறிவதற்கு தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட வேண்டியது கட்டாயச் செயற்பாடாகும்.

அந்தக் கைதின் மூலமே இந்த சம்பவத்தின் உண்மை வெளிப்படும். அவ்வாறு இல்லாமல் ஊடகங்கள் அல்லது தெளிவற்ற சூழ்நிலைச் சாட்சியங்கள் மூலம் இவ்விடயத்தின் உண்மைத் தன்மையைத் திசை திருப்பி விடக்கூடாது.

இவ்விடயம் மீதான புலனாய்வுத் துறை மற்றும் காவற்துறையின் துரித செயற்பாடுகளே நீதித்துறை பாதுகாப்பாக செயற்படுவதற்கு உத்தரவாதம் உண்டு என்ற செய்தியையும் நிலை நாட்டும்.

அதன் அடிப்படையில் நீதிபதிகள் அவர்களது கடமையைச் சரிவரச் செய்யக் கூடியதாகவும் இருக்கும்.

இந்தத் துன்பியல் நிகழ்வில் தனது கடமையைச் சிறப்புறச் செய்து வீரச்சாவடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பாராட்டுதற்குரியவர்.

அவரின் இழப்பு தொடர்பில் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். அதேபோன்று மற்றைய பாதுகாவலரும் இத்தகைய பாராட்டுக்குரியவரே.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் மேலும் எமது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், இந்த விடயம் நீதிபதி இளஞ்செழியனுக்கு அவரது நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்வித தளர்வினையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே எங்களினதும், மக்களினதும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE