சட்டவிரோத மதுசார உற்பத்தி, மண் அகழ்வுகள், மரம் வெட்டுதல் போன்ற வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிணை விண்ணப்பங்களை வழங்க கருணை காட்டாது என கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் மதுசார உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று பேர் கடந்த வெள்ளிக்கிழமை (09) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, தலா ஒரு இலட்சம் ரூபா காசுப்பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கிராம அலுவலர் வதிவிடத்தை உறுதிப்படுத்திய இரண்டு ஆட் பிணைகளில் செல்லுமாறும் அனுமதிக்கபட்டது.
இதேவேளை, பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நீதிமன்றத்தில் கையொப்பமிடுமாறும் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து பிணையில், மன்று கருணைகாட்டி பிணை நிபந்தனைகளை குறைக்குமாறு சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி கோரியுள்ளார்.
சட்டவிரோத மண் அகழ்வுகள் காடழிப்புக்கள் ,மரம் கடத்தல் ,மது உற்பத்தி போன்ற பாரதூரமான குற்ற செயல்களுக்கு நீதிமன்றம் எந்த விதத்திலும் கருணைகாட்டாது என்றும் இவ்வாறான குற்ற செயல்களுடன் தொடர்புபடடவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.