நுவரெலியா, அங்குராங்கெத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹேவாஹெட்ட ஹோப் தோட்ட கீழ் பிரிவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம்

309

 

நுவரெலியா, அங்குராங்கெத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹேவாஹெட்ட ஹோப் தோட்ட கீழ் பிரிவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக,  23 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்கள் விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்ட பகுதியில் பாரிய கற்பாறை ஒன்று தனது இடத்தை விட்டு விலகியுள்ளதுடன்,  அங்கு  மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இடம்பெயர்ந்த மக்கள்,   தோட்ட பகுதியில் தொடர்ந்து 11 வருடங்களாக மண்சரிவு ஏற்பட்டு வருவதாகவும்,அவ்வாறான காலப்பகுதியில் தாம் இடம்பெயர்ந்து பின் வீடுகளுக்கு திரும்புவதாகவும்  கூறியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் முயற்சியால் தங்களுக்கு வேறொரு இடத்தில் காணி வழங்கி வீடுகள் கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன.

எனினும், இது வரையிலும் காணியோ, வீடோ கிடைக்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில், வீடுகளில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர்கள் மிகவும் அச்சத்துடன் பல வருடங்காளாக வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

எனவே இந்த விடயம் தொடர்பில், சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக தீர்வினை பெற்று தருமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை குறித்த தோட்டப்பகுதியில் மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்டு 23 குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ள நிலையில், இவர்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 150 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆய்வு நிலையம் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆய்வு அறிக்கையை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE