நுவரெலியா விவசாய திணைக்களத்தின் கீழ் லிந்துலையில் இயங்கும் விவசாய திணைக்கள கிளை காரியாலயத்தில் இருக்கின்ற வேலைத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் இப்பிரதேசத்தில் உள்ள தோட்ட விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறுவதில்லை என இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தற்போது உரம் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்கின்ற நிலையில் விவசாய திணைக்களத்தின் ஊடாக மாணிய விலையில் உரத்தினை பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு கடந்த காலங்களில் பெய்த மழையால் பல விவசாயிகளினால் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமாகியதோடு சில இடங்களில் வெள்ளத்தினால் மரக்கறி வகைகள் அடித்துச் செல்லப்பட்டது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையிலும் எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்கப்படவில்லை என தெரிவிக்கும் இவர்கள் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு விவசாய சங்கத்தினை உருவாக்கப்பட வேண்டும்.
ஆனால் சில கிராம சேவகர் பிரிவில் மாத்திரமே சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அதற்கு சிறு சிறு உதவிகள் வழங்கப்படுகின்றன.
அதிகமான கிராம சேவகர் பிரிவில் சங்கங்களை அமைப்பதற்கு அதிகாரிகள் அசமந்தபோக்கினை கடைப்பிடிப்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான விவசாய திட்டத்தினை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு அதிகாரிகளின் ஆலோசனைகளிலேயே தங்கியுள்ளது.
எனவே லிந்துலை பிரதேசத்தில் இயங்கும் விவசாய திணைக்களம் தொடர்ச்சியாக அசமந்தபோக்கினை கைவிட்டு விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் விவசாய சங்கங்களை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோட்டப்பகுதிகளில் விவசாயங்களை மேற்கொள்ளும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.