நுவரெலிய மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் அமைக்கப்படவேண்டிய அவசியம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனால், கடந்த நவம்பர் 18ஆம் திகதி அமைச்சரவையில் முன்மொழியப்பட்டு, அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைச்சரவை உத்தியாகப்பூர்வ தீர்மானத்தின்படி, நுவரெலிய மாவட்ட புதிய உத்தேச பிரதேச சபைகள் அமைவு தொடர்பான நகல் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை நுவரெலிய மாவட்ட செயலாளர் திருமதி ஹெலன் மீகஸ்முல்ல, தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனிடம் கையளித்தார். அமைச்சரவை செயலாளர் எஸ். அபேசிங்க, தேசிய கலந்துரையாடல் அமைச்சின் செயலாளர் திருமதி பேர்ல் வீரசிங்கவுக்கு, டிசெம்பர் 3ஆம் திகதி இந்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் எழுதியுள்ள கடிதத்தின் மூலம் இது தொடர்பான மேல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் மனோ கணேசனை கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது:- நுவரெலியா மாவட்டத்தில் வாழும் 706,588 சனத்தொகையில் தமிழ் மக்கள் 57.69, சிங்களவர்கள் 39.60, முஸ்லிம்கள் 2.47 என்ற விகிதாசாரத்தில் இன்று வாழ்கிறார்கள். எனவே நுவரெலியா மாவட்டம் மலையக தமிழ் இந்திய வம்சாவளி மக்களின் இதயம் ஆகும். எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் 6,500 சனத்தொகைக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது, நுவரெலியா மாவட்டத்தில் 200,000இற்கு மேற்பட்ட சனத்தொகைக்கு ஒரு பிரதேச சபை, என்ற கணக்கில் நிலைமை இருந்து வருகிறது. இது இந்த மாவட்டத்தில் நமது மக்களுக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டுள்ள அநீதி ஆகும். இன்று இந்த நீண்ட கால அநீதி முடிவுக்கு கொண்டுவரப்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக அரசியல், தொழிற்சங்க பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருமுகமாக செயற்பட வேண்டும் என அனைத்து மலையக அமைப்புகளையும் கோருகிறேன். இம்மாவட்டத்தில் தற்போது உள்ள ஐந்து பிரதேச சபைகளின் எண்ணிக்கை, பத்து பிரதேச சபைகளாக உயர்த்தப்படும் முகமாக, இன்று என்னிடம் நுவரெலியா மாவட்ட செயலாளரினால் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த நகல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அம்பகமுவ, ஹன்குரன்கெத்த, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, நுவரெலியா, வலப்பனை, நோர்வூட், மதுரட்ட, தலவாக்கலை, நில்தன்டாஹின்ன ஆகிய பத்து புதிய பிரதேச சபைகள் நுவரெலிய மாவட்டத்தில் இன்று வாழும் 706,588 மக்களுக்காக உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விடயம், கொள்கையளவில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு நகல் திட்டம் மாத்திரமே. இதை நாம் இன்னமும் விரிவுபடுத்தலாம் அல்லது இதை ஏற்றுக்கொண்டு அமுல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அதேவேளை பிரதேச சபைகளுக்கு வாக்களிக்கும் தோட்டப்புற மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்த பிரதேச சபைகளில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளாளும், பிரதேச சபைகளாலும் அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகளை செய்ய முடியாது என்ற ஒரு சட்ட விதியும் இப்போது இருந்து வருகிறது. இந்த சட்டம் இருந்த போதிலும், இப்போதும் நிதி ஒதுக்கீடுகள் நடைபெற்றுதான் வருகின்றன. ஆனாலும் இப்படி ஒரு சட்ட விதி இருப்பது ஆபத்தானது. இதனை காரணம் காட்டி, நமது பிரதேச சபைகளை அரசாங்கம் எந்த வேளையிலும் கலைத்து விடலாம். கண்டி மாவட்டத்தில், உடபலாத பிரதேச சபை இந்த காரணத்தை காட்டியே அன்றைய அரசினால் ஒருமுறை கலைக்கப்பட்டது. எனவே இந்த சட்டவிதி மாற்றப்படவேண்டும் என்ற தேவை நீண்டகாலமாக, அரசியல் கட்சிகளால் உணரப்பட்டு வந்தது. இதை மலையக சிவில் சமூகமும் அவ்வப்போது சுட்டிகாட்டி வந்தது. தற்போது இது தொடர்பில் உரிய சட்ட திருத்த அமைச்சரவை பத்திரத்தை இந்த விடயத்துக்கு பொறுப்பான உள்ளூராட்சி, மகாணசபைகள் அமைச்சர் நண்பர் பைசர் முஸ்தபா அடுத்த வார அமைச்சரவையில் சமர்பிக்க உடன்பட்டுள்ளளார். இந்த நீண்டகால சட்டரீதியான அநீதிகளை நீக்கிடும் இரண்டு நடவடிக்கைகளும், நமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் மக்கள் நலன் சார்ந்த முன்நோக்கிய தீர்க்கதரிசன கொள்கைக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றிகளாகும் என நான் கூறிவைக்க விரும்புகிறேன். – என்றார்.