நெலுக்குளம் குளப்பகுதியை அ;ண்டிய மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தை
முற்றுகையிட்டனர்
நெலுக்குளம் உக்குளாங்குளம் மற்றும் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்று 24-08-
2015 காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டனர்.
வவுனியா கமலநல சேவைகள் திணைக்களம் 65 குடும்பங்களது உறுதிக்காணி உள்ள பகுதிகளில் அளவீடு
செய்து காணிகளை சுவிகரிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டியே மக்கள் இந்த முற்றுகைப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 45 வருடங்களாக வாழ்ந்த இடத்தை பறிக்காதே, பறிக்காதே
பறிக்காதே அரச உறுதிக்காணிகளை பறிக்காதே, புதிய அரசாங்கமே எங்கள் துன்பத்தை
பாராயோ போன்ற வாசகங்களுடன் தங்களுடைய காணி உறுதிகளையும் தாங்கி நின்றனர்.
மேற்படி மக்களின் காணி பிரச்சனை தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்
எம்.கே.பந்துலகரிச்சந்திர அவர்களை சந்தித்த பின் கருத்து வெளியிட்ட வன்னி மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த காணிகளுக்கான உறுதியானது சந்திரிக்கா
பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்களால் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர் வவுனியா
மாவட்ட அரசாங்க அதிபர் காணி அளவீடு செய்வதை உடனடியாக இடைநிறுத்த உத்தரவிட்டிருப்பதாக
தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் எக்காரணம் கொண்டும் அந்த காணிகளை மீளப்பெற முடியாது
அக்காணிகள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இக்காணிப்பிரச்சனை தொடர்பில் கருத்து வெளியிட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி
ஆணையாளர் இ.விஜியகுமார் வவுனியாவில் அதிகளவான குளங்கள் ஆக்கிரமிக்கப்ட்டிருப்பதால்
வவுனியா மாவட்டம் வரட்சியை எதிர்நோக்கியிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் எதிர்காலத்தில்
எமது சந்ததியினருக்காக நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டிய தேவையிருப்பதால்
ஆக்கிரமிக்கப்பட்ட குளங்களை அளவீடு செய்து எல்லையிட்டு அவற்றை பாதுகாப்பதற்கான
நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் 1000 ஏக்கர் நீரேந்துப்பகுதி நிலமானது மக்களால்
அத்துமீறி ஆக்கிரமிக்கப்ட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். எதிர்கால சந்ததியினருக்காக
குளங்களை பாதுகாக்கும் இந்த நடவடிக்கையில் பொதுமக்கள் பொது அமைப்புக்கள் போன்றன
ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார்.