படைவீரர்களை பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்கள் மகஜர் ஒன்றில் பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த மகஜரில் முதல் கையொப்பத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று இடவுள்ளார் என ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டே சம்புத்தாலோக்க விஹாரையில் இன்று காலை 9.00 மணியளவில் பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
சம்புத்தாலோக்க விஹாரையில் இன்று பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன், வாகமொன்றின் ஊடாக நாடு முழுவதற்கும் மகஜர் எடுத்துச்செல்லப்பட்டு கையொப்பங்கள் திரட்டப்படவுள்ளன.
எதிர்வரும் 23ம் திகதி இந்த மகஜரை எடுத்துக்கொண்டு கண்டி மாநாயக்க தேரர்களை சந்திப்பதுடன், அதன் பின்னர் மகஜர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
சம்புத்தாலோக்க விஹாரையில் ஆரம்பமாகவுள்ள கையொப்பம் திரட்டும் நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர்.