பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை!

719

பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசேட உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புப் பேரவையின் 1373 பிரகடனத்தின் அடிப்படையில் அரசு இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளது.

பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அமைப்புக்களுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.

பயங்கரவாதிகளையும், பயங்கரவாத அமைப்புக்களையும் கண்டறியும் விசேட அதிகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிடம் வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் அமைப்புக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2ம் இணைப்பு

பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியை கட்டுப்படுத்தும் உத்தரவில் அமைச்சர் பீரிஸ் கையெழுத்திட்டுள்ளார்

பயங்கரவாத்திற்கு எதிராக போராடுதல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை கட்டுப்படுதல் தொடர்பான உத்தரவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கையெழுத்திட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளுதல், அதற்கு முயற்சித்தல், அதனுடன் சம்பந்தப்படுதல், வசதிகளை வழங்குதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழுக்களை பிரித்து அடையாளம் காணும் அதிகாரம் பெற்ற அதிகாரியான பாதுகாப்புச் செயலாளரின் பரிந்துரைக்கு அமைய இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழுக்களிடம் உள்ள சகல நிதி மற்றும் பொருளாதார வளங்கள் அடையாளம் காணப்பட்டு பட்டியலிடப்பட உள்ளது.

இந்த பட்டியலில் இருந்து அவற்றின் பெயர்கள் நீக்கப்படும் அவரை அவற்று விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும்.

அதிகாரம் பெற்ற அதிகாரியின் அனுமதியின்றி அந்த நிதியை பயன்படுத்துவது, பரிமாறிக்கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

 

SHARE