ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அல்.ஹசைன் வடமாகாணத்திற்கு விஜயம் செய்த போது கூறிய கூற்று ஒன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலி செயற்பாட்டாளர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மனித உரிமை ஆணையாளரிடம் கோரியதாகவும், ஆனால் அந்த கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படுவதை சர்வதேச சட்டங்களோ அல்லது சர்வதேச நாடுகளோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர்களின் வழக்குகள் துரிதமாக விசாரணை செய்யப்பட்டு குற்றமற்றவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையாளர் கூறியதாகவும் விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
புலம்பெயர்நாடுகளில் உள்ள சில தமிழ் இணையத்தளங்கள் இச்செய்தியை திரிபு படுத்தியும் வெளியிட்டிருந்தன. தமிழ் கைதிகளை விடுதலை செய்ய ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் மறுப்பு என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த கூற்றை விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களிடம் கூறாமால் சுமந்திரன் கூறியிருந்தால் சில தமிழ் ஊடகங்கள் போர்க்கொடி தூக்கியிருப்பார்கள். அதற்கு தலைகால் வைத்து திரிபு படுத்தி வெளியிட்டிருப்பார்கள். தமிழ் கைதிகளை விடுதலை செய்ய சுமந்திரன் மறுப்பு என்று கூட செய்தி வெளியிட்டிருப்பார்கள்.
இந்த வேளையில் அரசியல் கைதிகள் என சிறையில் இருக்கும் தமிழ் கைதிகளை அழைக்கலாமா, அரசியல் கைதிகள் யார், போர்க்கைதிகள் யார், குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் யார் என்று சர்வதேச சட்டங்கள் அல்லது ஐ.நா.மனித உரிமை பேரவை போன்ற அமைப்புக்கள் என்ன கூறுகின்றன என நாம் பார்க்க வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகள் அல்லது அரசியல் கைதிகள் என யாரும் இலங்கை சிறைகளில் இல்லை என அண்மையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராசபக்ச கூறியிருந்தார்.
அரசியல் கைதிகள் என்ற வரையறைக்குள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் வருவார்களா என்று முதலில் பார்க்க வேண்டும்.
சர்வதேச நாடுகளில் அரசியல் கைதிகள் என்பவர்கள் எந்த குற்றங்களும் புரியாது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அல்லது சாத்வீக ரீதியில் போராட்டங்களை நடத்திய வேளையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்களே அரசியல் கைதிகள் என்ற வரையறைக்குள் அடக்கப்படுகிறார்கள்.
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக முன்னர் அமிர்தலிங்கம், நவரத்தினம், போன்றவர்களும், பின்னர் மாவை சேனாதிராசா, காசி ஆனந்தன், வண்ணைஆனந்தன் போன்றவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் எந்த வன்முறைகளோ குற்றங்களோ புரியாத அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள். இவர்களை போன்றவர்களையே அரசியல் கைதிகள் என்ற வகைப்படுத்தப்படுகின்றனர்.
இலங்கை சிறைகளில் தற்போது இருப்பவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள். யுத்தகாலத்தின் போது வடக்கு கிழக்கிலும் வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் பயங்கரவாத குற்றங்களை புரிந்தார்கள் என்று குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டவர்கள்.
இவர்களை குற்றம் புரிந்த கைதிகள் என்றே சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என தமிழர் தரப்பில் கோருகின்ற போது தமிழ் அரசியல் கைதிகள் யாரும் தங்களிடம் இல்லை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே தங்களிடம் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் மிக இலகுவாக கூறி தமிழர் தரப்பின் கோரிக்கையை நிராகரித்து வருகிறது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என கோருவதை விட பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும், விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றமற்றவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றே தமிழர் தரப்பில் கோர வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் செய்யாத பலர் சிறைகளில் தண்டனை அனுபவத்து வருகின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் இலங்கையில் வாழும் எந்த ஒரு தமிழன் மீதும் குற்றம் சாட்ட முடியும்.
தகவல் கொடுக்க தவறினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் ஆகக்குறைந்தது 5வருட சிறைத்தண்டனை வழங்கப்படும்.
பயங்கரவாதி ஒருவரின் நடமாட்டம், அல்லது பயங்கர குற்றம் புரியப்போகிறார் என உணரும் பட்டசத்தில் அவரைப்பற்றிய தகவல் படையினருக்கு தகவல் கொடுக்கவில்லை என்றால் அவர் குற்றவாளியாக கருதப்படுவார். வெளிப்படையாக சொல்லப்போனால் விடுதலைப்புலி உறுப்பினர் அல்லது ஆயுதக்குழு உறுப்பினர் ஒருவரின் நடமாட்டம், அல்லது அவர் பற்றிய தகவல் தெரிந்து அதனை படையினரின் தெரிவிக்காவிட்டால் அது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
விடுதலைப்புலிகளை தெரியாத அல்லது ஆயுதக்குழுக்களை தெரியாதவர்கள் இலங்கையில் யார் இருக்கிறார்கள்?
இவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பலபாகங்களிலும் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்கள் முஸ்லீம்கள் மலையகத்தமிழர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்த பலர் இவ்வாறுதான் கைது செய்யப்பட்டார்கள்.
உதாரணமாக மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நகருக்கு வரும் தமிழ் மக்களை புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ராசிக்குழு போன்ற இராணுவ ஒட்டுக்குழுக்கள் பிடித்து இராணுவ புலனாய்வு பிரிவினரிடமும் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரிடமும் ஒப்படைத்த வரலாறுகள் பல உண்டு.
இந்த இராணுவ ஒட்டுக்குழுக்களால் பிடிக்கப்படும் அப்பாவி தமிழ் மக்கள் அக்குழுக்களாலும் பின்னர் சிறிலங்கா படையினராலும் சித்திரவதை செய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு காலவரையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
அதுபோன்றுதான் வன்னியிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவுக்கு வரும் பொதுமக்களை வவுனியாவில் இருந்த புளொட் உட்பட இராணுவ தமிழ் ஒட்டுக்குழுக்கள் பிடித்து பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். அப்பாவி பொதுமக்களான இவர்களில் பலர் இன்னமும் சிறைச்சாலைகளில் வாடுகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோருவதை விடுத்து பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும், என்றும் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் குற்றமற்றவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றே கோர வேண்டும், இதனை சர்வதேச சமூகமும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.
கடந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூட பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பலர் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலானவர்கள் நேரடியாக குற்றம் செய்தவர்கள் அல்ல. சாதாரண சட்டத்தின் கீழ் ஒருவரை காரணம் இன்றி மூன்று மாதங்களுக்கு மேல் தடுத்து வைக்க முடியாது. இதனால் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் கூட பிணையில் வெளிவர முடியும்.
பொதுமன்னிப்பு என்பது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்களுக்கே அன்றி குற்றம் செய்யாது பிழையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு அவர்கள் நிராபராதிகள் என விடுதலை செய்யப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோருவது தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் குற்றம் செய்தவர்கள் என கருத இடமளித்து விடும்.
நிரபராதிகள் விடுதலை செய்யப்படுவதற்கும் தண்டனை பெற்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கும் வழிவகை செய்யும் அழுத்தங்களே கொடுக்கப்பட வேண்டுமே ஒழிய வெறுமனே தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுங்கள் என வெற்றுக்கோசத்தை வைப்பது கோரிக்கைகளை மிக இலகுவாக சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதற்கு வழி அமைத்து விடும்.
ஐக்கிய நாடுகள் மனித உரமை ஆணையாளர் இளவரசர் ஷெய்ட் ராட் அல் {ஹஸைனின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கம் கடந்த முறை ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கையின் சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆராய்வதற்காகவும் போருக்கு பின்னர் வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் மனித உரிமை முன்னேற்றங்கள் குறித்து பார்வையிடுவதாக அமைந்திருந்தது.
இலங்கைக்கு ஆணையிடுவதற்கோ, அல்லது ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீரமானத்தை நடைமுறைப்படுத்துவதற்கோ அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு அதிகாரம் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கும் கிடையாது.
ஐக்கிய நாடுகள் சபையில் மூன்று கட்டமைப்புக்கள் உள்ளன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை,
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை.
இந்த மூன்று கட்டமைப்புக்களிலும் மிகவும் பலவீனமானதும் அதிகாரம் அற்றதுமாக ஐக்கிய நாடகள் மனித உரிமை சபை காணப்படுகிறது.
ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் வேகத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் நிறைவேற்றப்படும் வேகத்தை ஒப்பிட முடியாது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு தனது அங்கத்துவ நாட்டை கோரலாம், சற்று அழுத்தம் கொடுக்கலாம், பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த படைப்பலத்தை பயன்படுத்துவதற்கு கூட பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் வல்லரசு நாடுகளால் முடியும். ஆனால் அத்தகைய பலமோ அதிகாரமோ ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது.
காணாமல் போனவர்கள் விடயத்தில் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரால் அரசாங்கத்திடமிருந்து உரிய பதிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இறுதிப்போரில் சரணடைந்ததாக கூறப்படும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் உட்பட காணாமல் போனவர்கள் யாரும் உயிருடன் இல்லை என அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார்.
இதனை உறுதி செய்வது போல கடந்த ஆண்டு ஜனவரி வரை பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதபாய ராசபக்சவும் சரணடைந்தவர்கள் என யாரும் இல்லை, விடுதலைப்புலிகள் அனைவரும் போரில் கொல்லப்பட்டு விட்டனர் என கடந்த வாரம் மீண்டும் கூறியிருந்தார்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மீள்குடியேற்றம், இராணுவ வெளியேற்றம், காணாமல் போனோர் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் விவகாரம், போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு என நீண்டு செல்லும் பட்டியலில் இவை எதற்கும் உருப்படியான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் விஜயம் பயன்பட்டிருக்கிறதா என்றால் அது பூச்சியமாகவே இருக்கிறது.
அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கையில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
அந்த நற்சான்றிழை கொடுப்பதற்காகவே அவரின் இலங்கை விஜயம் அமைந்திருந்தது. அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இது எதிரொலிக்கலாம்.