பறக்கும் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி

278
பிரித்தானியாவின் லண்டன் நோக்கி பயணமான விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணியை சக பயணிகள் மடக்கி பிடித்ததால் விபத்தில் இருந்து தப்பியது.மொரோக்கோவில் இருந்து 180 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்டுள்ளது இந்த விமானம்.

விமானத்தில் பயணம் செய்த பிரித்தானிய பயணி ஒருவர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கலாட்டா செய்ய துவங்கியுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய அவர், ஒரு கட்டத்தில் தனது காதலியை பிடித்து தள்ளி விட்டுள்ளார்.

மேலும் மது போதையில் இருந்த அவர் விமானம் 30,000 அடி உயரத்தில் பறப்பதை அறியாமல் அவசர கதவினை திறக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து சக பயணிகள் அவரை மடக்கி பிடித்ததுடன் குண்டுகட்டாக தூக்கி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையுடன் பிணைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய விமானிகள் உடனடியாக Bordeaux விமான நிலையம் நோக்கி விமானத்தை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் விமான நிலையத்தில் காத்திருந்த பிரான்ஸ் பொலிசார் பிரித்தானிய பயணியை விமானத்தில் இருந்து இழுத்துச்சென்றுள்ளனர்.

30 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் செயல் சக பயணிகளுக்கு நேர விரயத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட நபருடன் பயணம் செய்த பெண் அவரது செயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE