பள்ளியில் இருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தை தப்பி ஓட்டம்: அச்சத்தில் மக்கள்

288
பெங்களூரூவில் தனியார் பள்ளியில் இருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தை உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு வர்த்தூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 7ஆம் திகதி சிறுத்தை ஒன்று புகுந்தது அட்டகாசம் செய்தது.

வனத்துறையினர், பொலிசார் ஆகியோர் சேர்ந்து சுமார் 12 மணிநேரம் போராடி அந்த சிறுத்தையை பிடித்தனர்.

சிறுத்தையை பிடிக்க முயன்ற போது, 2 வனத்துறையினரையும் சிறுத்தை கடித்து குதறியது. இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் பிடிபட்ட சிறுத்தையை பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். அங்குள்ள வனவிலங்குகளுக்கான மறுவாழ்வு மையத்தில் சிறுத்தையை அடைத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூங்காவில் உள்ள ஊழியர்கள் அந்த சிறுத்தைக்கு உணவு வழங்கினார்கள்.

பின்னர் கூண்டை சரியாக பூட்டவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்த சிறுத்தை காணாமல் போய் இருப்பதை கண்டு ஊழியர்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் கூண்டில் உள்ள பிரதான கதவு வழியாகவே சிறுத்தை வெளியே தப்பி ஓடி இருந்தது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் பன்னரகட்டா உயிரியல் பூங்காவின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், பூங்காவை சுற்றியுள்ள ராகிஹள்ளி, கோனிகுப்பா ஆகிய கிராமங்களில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுத்தையை தேடும் பணியில், வனத்துறையினர் 62 பேர் அடங்கிய 6 தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

SHARE