எட்டு பிணைக்கைதிகளை கொலை செய்ததற்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக உடனடியாக குற்றம் நிரூபிக்கப்பட்ட அனைத்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற ஈராக் பிரதமர் Haider al-Abadi உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பு குறித்து முடிவெடுக்கும் கட்டத்தை தாண்டிவிட்ட, மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்றுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐ.எஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்ததற்காக ஈராக்கில் 100 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட 300க்கும் அதிகமானோருக்கு மரண தண்டனையும் நூற்றுக்கணக்கானோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறையைச் சார்ந்த ஒருவர் தெரிவித்தார்.
சிறையிலுள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் துருக்கி அல்லது முன்னாள் ரஷ்யப் பெண்கள், ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு ஆணும் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவரும் கூட மரண தண்டனைக்கு காத்திருக்கிறார்கள். ஐ.எஸ் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த எட்டு பேரின் மரணத்துக்கு பழி வாங்கப்போவதாக பிரதமர் சபதம் எடுத்திருந்தார். பாக்தாதின் நெடுஞ்சாலை ஒன்றின் ஓரமாக அந்த எட்டு பிணைக்கைதிகளின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. எங்கள் பாதுகாப்புப் படைகளும் ராணுவமும் இந்த மரணங்களுக்கு பழி வாங்கும் என்று பிரதமர் கூறினார். முன்பதாக ஐ.எஸ் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் படு காயமடைந்திருந்த முகத்துடன் காணப்பட்ட அந்த எட்டு பிணைக்கைதிகளையும் காட்டி, பாக்தாத் சிறைகளிலுள்ள சன்னி பிரிவு இஸ்லாமியப் பெண்களை மூன்று நாளைக்குள் விடுவிக்காவிட்டால் பிணைக்கைதிகளை கொன்று விடுவதாக தீவிரவாதிகள் மிரட்டினர். ஆனால் அந்த வீடியோ வெளியாவதற்கு முன்பே அந்த பிணைக்கைதிகள் கொல்லப்பட்டது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.