வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலயத்தின் பாடசாலைக்கட்டட கட்டுமானத்திற்கு பங்களிக்கும் வகையில் இவ்வாண்டுக்கான ஒதுக்கீட்டிலிருந்து 200 சிப்பம் (பைக்கற்று) பைஞ்சுதை (சீமெந்து) வழங்குவதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வள்ளுவர்புரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது மக்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறையாகவுள்ள பாடசாலை கட்டடமும் கட்டிமுடிக்கப்படும் எனவும் அச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வள்ளுவர்புரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக குறித்த கிராமத்தில் மக்கள் சந்திப்பை ஏற்படுத்திய மதிப்புறு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் மக்களின் பல்வேறு குறைகளையும் கேட்டறிந்தார்.
பாடசாலை அபிவிருத்தி இன்னமும் விடுவிக்கப்படாத நஞ்சுண்டான் குளம் மற்றும் அபகரிக்கப்பட்ட பொதுக்காணிகள் மீட்பது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை மக்கள் முன்வைத்தனர்.
குறைமுன்வைப்பின் நிறைவில் ரவிகரன் உரையாற்றும் போது வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலயத்தின் கட்டுமானத்திற்காக இவ்வாண்டுக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 200 சிப்பம்(பைக்கற்று) பைஞ்சுதை வழங்குவதாகவும் மேலும் மாகாணக்கல்விக்குழுக்கூட்டத்தி ல் கலந்துரையாடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதான, முழுமைப்படுத்தப்படாது குறையாகவுள்ள பாடசாலைக்கட்டடமும் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பொதுக்காணி மீட்பு மற்றும் நஞ்சுண்டான் குளம் விடுவிக்கப்படாமை தொடர்பான மக்களின் கேள்விக்கு ரவிகரன் பதிலளிக்கையில் அவை தொடர்பான தனது நடவடிக்கைகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளன என்று தெரிவித்ததோடு குறித்த குளமும் பொதுக்காணிகள் மீட்புச்சிக்கலும் தீர்வாகும் வரை தமது குரல் இவற்றுக்காகவும் ஒலித்துக்கொண்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.