கண்டியில் பாடசாலை மாணவன் ஒருவரை கடுமையாக தாக்கியதாக கைது செய்யப்பட்டிருந்த நால்வரும் பொலிஸ் பிணையில் நேற்று(23) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மோதல் இடம் பெற்ற குழுக்களுக்கு இடையில் சாதகமான பேச்சுவார்த்தை இடம் பெற்றதை அடுத்தே சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி, கண்டியிலுள்ள பாடசாலை ஒன்றின் முன்னால் வைத்து மாணவன் ஒருவரை குழுவொன்று கடுமையாக தாக்கியது, இவ்வாறு தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.
இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் என கூறப்படுகின்றது.
பாடசாலை சட்ட திட்டங்களுக்கு இணங்க மாணவர் செயற்படாமையினால், மாணவர் தலைவருக்கும் இந்த மாணவருக்கும் இடையில் மோதல் இடம் பெற்றுள்ளது.
மேலும் பாடசாலை மாணவத் தலைவர், 4 பேரை தெரிவு செய்து இம்மாணவனை தாக்கியுள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் இந்நால்வரையும் நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்திருந்ததாகவும் அறிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.