வெவ்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் கீழ் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பாரபட்சம், அடக்குமுறை மற்றும் சொத்து சேதம் ஆகியவற்றிட்கு முகம் கொடுத்த ஊடகவியலாளர்களுக்கு இந்த விசேட குழுவின் அறிக்கைக்கமைய நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்கள் தமது தொழிற்துறை அடையாளங்களுடன் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட விவரங்களை ஜனாதிபதி காரியாலயத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பான தமது தகவல்களை ஜுன் மாதம் 15ஆம் திகதிக்கு முன்பாக எஸ்.டீ. கொடிகார, ஜனாதிபதி மேலதிக செயலாளர், ஜனாதிபதி அலுவலகம்,கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.