பாராளுமன்றத்தினுள் பிரதமருக்குரிய வசதிகள் – ஜெயசூரிய

163

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்குரிய சகல வசதிகளையும் பாராளுமன்றத்தில் பெற்றுக் கொடுப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்ட உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

பாராளுமன்றத்தினுள் புதிய பிரதமருக்குரிய வசதிகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி , சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

அரசியலமைப்பிற்கமைய புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் `அது குறித்து கவனம் செலுத்தி அதற்கமைய ஏனைய அரச அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளும் செயற்படுவார்கள் என சபாநாயகர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் பதவிக்குரிய வசதிகளை பெற்றுக் கொடுக்கையில் பாராளுமன்ற அதிகாரிகள், வர்த்தமானி அறிவித்தலை பின்பற்றி தமது பணியை முன்னெடுக்க வேண்டும். அதற்கு தமது தரப்பில் எந்த இடையூறும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் சபாநாயகர் குறிப்பிட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது.

இதேவேளை, பாராளுமன்றத்தை துரிதமாக கூட்டுவதன் அவசியம் தொடர்பாக சபாநாயகர் இங்கு தெளிவுபடுத்தியதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது. இதற்கு ஜனாதிபதி சாதகமான பதில் வழங்கியுள்ளார். இது தொடர்பில் தனது பதிலை விரைவில் அறிவிப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபாநாயகர் கரு ஜெயசூரியவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.ஆசன ஒதுக்கீடு தொடர்பில் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஊடகங்களுக்கு தவறான கருத்துக்களை வெளியிட்டு சபாநாயகருக்கு அகௌரவம் ஏற்படும் வகையில் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE