நேற்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல கேள்விக்கான தருணத்தில் சபையில் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில , நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தொடர்பிலான விபரங்களை வெளியிடுமாறு கேள்வி ஒன்று எழுப்பியுள்ளார்.
இவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, நிதிக் குற்றப் பிரிவில் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதிகாரிகளின் விபரங்களை வெளியிட முடியாது தெரிவித்துள்ளார்..
இதனைத் தொடர்ந்து நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்களின் விபரங்கள் பற்றி பாதுகாப்பு மற்றும் தனித்துவம் பேணப்பட வேண்டியதுடன், விபரங்களை வெளியிடுவதால் இடம்பெறும் விசாரணைகள் பாதிக்கப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
இவர்களின் பதில்களைத் தொடர்ந்து பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தொடர்பிலான விபரங்களை வெளியிடுவதாயின் ஊடகவியலாளர் எக்னலிகொட மற்றும் பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூடீன் ஆகியோரின் கொலைகளுடன் சம்மந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களது பெயர்களையும் வெளியிட வேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளார்.