ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அங்கு அவர் கருத்து தெரிவித்த போது,
தேசிய அரசு கல்வியில் பாரிய பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் முகமாக பல சவால்மிகு செயற்றிட்டங்களை அமுல்படுத்துவதையிட்டு பெருமிதம் கொள்கின்றேன்.
அண்மையில் பாடசாலை சிறந்த பாடசாலை எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் நாட்டின் கிராமப்புர வறிய மாணவர்களுக்கு நகர்ப்புற பிரசித்திபெற்ற பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்குக்கிடைக்கும் சகல வசதிகளுடன் கூடிய பௌதீக வளங்களும், ஆளணி வளங்களும் நிறைந்த பாடசாலையினை ஸ்தாபிப்பது இலங்கை வரலாற்றில் கல்வித்துறையில் பாரிய வளர்சிப் பாதையின் முன்னோடி நடவடிக்கையாகும்.
வட மாகாணத்தின் வன்னி மாவட்டத்தைப் பொறுத்த வரையில், ஆரம்ப காலங்களில் முழு இலங்கையினதும் கல்வி முன்னேற்றத்தில் முன்னோடியாக இருந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்தாலும், தொடர்ச்சியான 30 வருட யுத்தத்தின் காரணமாக இன்று ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளது. எனவே இப்பிரதேச சமூக மேம்பாட்டின் அடித்தளமாக அனைத்துப் பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது.
இங்கு முக்கியமாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் போன்ற விடயங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதுடன், விளையாட்டு மைதானம், விஞ்ஞான ஆய்வு கூடம், வாசிகசாலை வசதிகள், கனிணி அறைகள் மற்றும் உபகரணங்கள் உடினடியாக வழங்கப்பட வேண்டும்.
பொதுவாக ஆசியர் பற்றாக்குறையானது சமத்துவமற்ற தன்மையின் வெளிப்பாடாகும். அதாவது தேசிய பாடசாலைகளில் மிகையாக உள்ள ஆசிரியர்கள் கிராமிய பாடசாலைகளுக்காக மாற்றப்பட வேண்டும். குறிப்பாக வன்னிப் பகுதியின் எல்லைப் பிரதேச சிங்களக் கிராமங்களில் பாரிய ஆசிரிய பற்றாக்குறை நிலவுகின்றது. தூரப்பகுதிகளிலிருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே மாற்றலாகிச் செல்கின்றனர். இது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.
வவுனியா இறப்பைக்குளம் மகளிர் தேசிய பாடசாலைக்கு நீண்டகாலமாக ஒரு நிரந்தர விளையாட்டு மைதானம் இல்லாமல் இருப்பது ஒரு பாரிய குறைபாடாகும். ஆனால் இன்று எமது அரசாங்கத்தின் நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக அது கிடைக்கப்பட்டுள்ளது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதேபோல, நீண்ட காலமாக பதில் அதிபர்களாகக் கடமை பார்க்கும், அந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அயராது உழைக்கும் அனைத்து உப அதிபர்களுக்குமான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் வலயக் கல்விப் பணிப்பாளர்களது வசதிகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.
கல்வியே ஒரு சமூகத்தின் உயிர் நாடி, கற்றவனும் கற்காதவனும் சமமற்றவர்கள் என இஸ்லாம் கூறுகின்றதே அன்றி பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று எங்கும் கூறவில்லை. கல்வி அமைச்சின் வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்த ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக இஸ்லாமிய கலாசாரம் மற்றும் தனியார் சட்டம் முஸ்லிம் பெண்களின் கல்விக்குத் தடையாக உள்ளது என்ற ஒரு தவறான கருத்தை முன்வைத்தார்.
அதனை நான் முற்றாக மறுக்கிறேன். ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பாகிஸ்தான் முஸ்லிம்கள் பற்றிய அறிக்கைகளை இலங்கை முஸ்லிம் பெண்களுடன் தொடர்புபடுத்த அவர் எடுத்த முயற்சி பொருத்தமற்றதாகும்.
அதுபோல, கடந்த வெள்ளிக்கிழமை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் சம்பந்தமாக தெரிவித்தக் கருத்துக்கள் உண்மைத் தன்மை அற்றவை, இதற்காக இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பாக எனது அதிர்ப்தியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுமார் 2000 வருடங்களாக இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இந்த நாட்டின் அனைத்து சமூகங்களோடும் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து வருவது யாவரும் அறிந்த விடயமே.
காலத்துக்குக் காலம் இந்த நாட்டில் அரசியல் இலாபம் கருதி இனவாதக் கட்சிகளும், ஜே.வி.பி போன்ற அமைப்புக்களும் ஆயுதமேந்தி கலவரங்களைத் தூண்டினாலும். ஒருபோதும் இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் அரசாங்கத்துக்கோ அல்லது சக இனக்குழுக்களுக்கு எதிராகவோ போராடியவர்கள் அல்ல.
எதிர்காலத்திலும் வன்முறையை ஒரு தெரிவாக எடுக்க மாட்டார்கள் என்பதை இந்த சபையில் உறுதியாகக் குறிப்பிடுகின்றேன். தேசபற்றுமிக்க இலங்கை முஸ்லிம்கள் நாட்டில் சமாதானத்தையே விரும்புகின்றனர். அதற்காவே இந்த ஆட்சிமாற்றத்துக்கும் பூரண ஆதரவை வழங்கினார்கள் என்பதையும் நான் உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.
சுமார் 4 வருட காலமாக இனவாதிகள் இட்டுக்கட்டிய விடயங்களை இந்த சபையில் நீதி அமைச்சர் நியாயப்படுத்த முயற்சித்ததன் பின்னணி மர்மமானது. முஸ்லிம்களின் முக்கிய கல்வி நிறுவனங்கள் அமையப் பெற்றுள்ள பேருவலை, கல்எலியா, கல்முனை, குருநாகல் போன்ற பகுதிகளில் உல்லாச பயணி விசாவில் வெளிநாடுகளிலிருந்து கணிசமானோர் வருகை தருவோர் அடிப்படை வாதத்தைப் போதிக்கின்றனர் என்பது மிகவும் மோசமான குற்றச்சாட்டாகும்.
இன்று இந்த அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் பல ஆயிரம் சிறந்த மேதைகளை உருவாக்கி அவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் மேம்பாட்டுக்கும் பாரிய சேவையாற்றி வருவதை பட்டியலிட்டுக் கூற முடியும். ஆனால் அமைச்சர் அங்கு உருவாக்கப்பட்ட ஒரு தீவிரவாதியை பெயரிட முடியுமா என கேற்க விரும்புகிறேன்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் குறிப்பிடுவது போல சர்வதேச பாடசாலைகளில் தீவிரவாதம் போதிக்கப்டுவதாயின் அரசு ஏன் இந்த 104 சர்வதேச பாடசாலைகளையும் தடைசெய்து விட்டு இங்கு கற்கும் 1 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்களை உடனடியான அரச பாடசாலைகளில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதில்லை? அவ்வாறு செய்வதாயின் நாம் எமது பூரண ஆதரதவை வழங்குவோம்.
அதேபோல பிமல் ரத்நாயக13 வருட பாடசாலைக் கல்வியை கட்டாயப்படுத்த உடனடி நடிவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டார். கீழ் மட்டத்தில் பணிபுரியும் ஜே.வி.பி போன்ற ஒரு கட்சி நாட்டின் உண்மையான நிலை அறியாது உளறுவதை யிட்டு நான் வெட்கப்படுகிறேன். உதாணமாக கொழும்பு மாவட்டத்தைப் எடுத்துக் கொண்டால் வருடாந்தம் 5,000 முஸ்லிம் மாணவர்கள் பாடசாலைக்கான புதிய அனுமதி வேண்டிநிற்கின்றனர். ஆனால் துர்பாக்கியவசமாக அவர்களில் 2,000 பேர் மாத்திரமே அரச பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
ஏனையோர் அவர்களாகவே விரும்பி இந்த சர்வதேச பாடசாலைகளுக்குச் செல்லவில்லை மாறாக இவர்கள் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே சர்வதேச பாடசாலைகளுக்குச் செல்லுகின்றனர். பாடசாலைகளில் கற்கும் காலத்தை நீடிப்பது ஒரு புறமிருக்க ஆரம்பக் கல்வியைக் கூட கற்க பாடசாலைகள் இன்றி ஏங்கும் சிறார்களுக்கு உரிய பாடசாலைகளை நிறுவி அவர்களையும் பாடசாலைகளில் இணைப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
வளமிக்க சமூகங்களுக்கு பாடசாலை கால நீடிப்பு ஒரு முக்கியமான விடயமாக இருப்பினும் பாடசாலைகளற்ற கொழும்புப் பிரதேசத்திலும் போதிய ஆசிரியர் மற்றும் வளங்கள் அற்ற கிராமியப்புறத்திலும் இதன் சாத்தியப்பாடு பற்றி நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
மேற்கத்தேயத்தை திருப்திப்படுத்துவதை ஜே.வி.பி. விரும்பினாலும், அடிப்படைப் பிரச்சினைகளை நாம் சரியாகப் புரிந்து பணியாற்ற வேண்டும்.
கல்வி உரிமை என்பது ‘அனைத்துச் சமூகங்களினதும் அடிப்படை உரிமையாகும்’ எனவே குக்கிராமங்கள் தொடக்கம் நகர்ப்பிரதேச சேரிகள் மற்றும் கொட்டில்களில் வாழும் அனைத்துப் பிள்ளைகளினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ‘சமத்துவம்’ அற்ற கல்வி முறையை ஒரு பாரிய மோசடி அல்லது துரோகம் என்று கூட குறிப்பிடலாம் என தெரிவித்துள்ளார்