பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நன்றி தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவையாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமைக்காக பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு சென்று, மக்களுக்கு சேவையாற்ற முடிந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாக மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற திட்டமிட்டுள்ளதாக சரத் பொன்சேகா கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு, சரத் பொன்சேகாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்குவது குறித்து எடுத்த தீர்மானம் தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், விஜயதாச ராஜபக்ச, ரோசி சேனாநாயக்க போன்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் சரத் பொன்சேகாவிற்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்குவதனை எதிர்த்திருந்தனர்.
பெரும்பான்மையானவர்கள் ஆதரவினை வெளியிட்டதனைத் தொடாந்து சரத் பொன்சேகாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம், சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.