பிரதமருடன் நாளைய தினம் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்தத்தகவலை வெளியிட்டுள்ளார். நாளைய தினம் வடமாகாண முதலமைச்சருக்கும், பிரதமருக்கும் இடையில் கொழும்பில் முக்கிய சந்திப்பு நடைபெறவிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இதன்போது முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமை குறித்து பேசப்படும் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், செய்தித்தாள்களே இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன. அதற்காக தாம் என்ன செய்யமுடியும் என்று விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் பிரதமரிடம் தாம் கடந்த பெப்ரவரி மாதத்தில் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வடமாகாணத்தின் தேவைகள் குறித்து மீளாய்வுக் கூட்டம் ஒன்று மாத்திரமே நாளைய தினம் நடைபெறும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
திறைசேரியின் ஆலோசகர் பாஸ்கரலிங்கத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் உலக வங்கி உட்பட்ட பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
இதேவேளை, இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடமாகாண முதலீட்டாளர் மாநாடு தொடர்பில் கருத்துரைத்த அவர், வடமாகாணத்தில் தேவைகளை அறிந்துக்கொள்ளாமல் வெறுமனே முதலீட்டாளர் மாநாட்டை நடத்துவதில் பயனில்லை என தெரிவித்துள்ளார்.