பிரதமர் மோடி இலங்கை விவகாரத்தை எவ்வாறு கையாளப்போகின்றார்

593

முள்ளிவாய்க்கால் அழிவில் கண்ணோக்கி பார்க்காத இந்தியா, தமிழ் மக்கள் மீது தற்போது அக்கறை காட்டுவது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதாய் அமைகிறது. மோடி பதவியேற்பு விழாவில் கர்நாடக மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி பிர தமராக பதவியேற்றிருக்கின்றார். இந்த விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமி ழக முதல்வர் ஜெயலலிதா விழாவை புறக்கணிப்பதாகவும், பிரதிநிதியையும் அனுப்பமாட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பெங்களுரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

மேலும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட வேலைகள் இருப்பதால் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டதுடன், டெல்லி செல்லும்போது சாண்டி மோடியை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. மோடி யின் பதவியேற்பு விழா வில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரளா மற்றும் கர்நாடக முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதேவேளை மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருந்தார். மோடி யின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தவிர தி.மு.க தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உட்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது என்று தே.மு.தி.க, பா.ம.க ஆகிய கட்சிகள் முடிவு செய்திருந்தன. அதே சமயம் பதவியேற்பு விழாவை ம.தி.மு.க புறக்கணித்தது. இந்நிலையில் பா.ஜ.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பா.ஜ.க வின் அழைப்பை ஏற்று அவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். பா.ம.க தலைவர் ஜி.கே. மணி மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகி யோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்கள். இதில் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே டெல்லிக்கு சென்றிருந்தார். ஜி. கே. மணி காலையில் டெல்லிக்கு சென்றிருந்தார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோ ருடன் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். இதற்காக அவர் இரவு அல்லது காலை நேரத்தில் குடும்பத்துடன் டெல்லிக்கு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் இரவு டெல்லி சென்றார். இந்நிலையில் ராஜபக்ஷவின் வருகையை கண்டித்து ம.தி.மு.க மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறது. மஹிந்த ராஜபக்ஷவின் வருகைக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருவதை கண்டித்து சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றிருந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகையை கண்டித்து மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை ஜனாதிபதிக்கும், பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையி லான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடித்த கொள்கையையே தற்போது பா.ஜ.க.வும் தொடர்வதாக மே 17 இயக்கத்தினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இதே நிலை தொடருமானால் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே பா.ஜ.கவிற்கும் ஏற்படும் என்றும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. இலங்கை அரசுடன் இந்திய அரசு கைகோர்த்தால் அதனை தமிழ்ச்சமூகம் ஒருபோதும் ஏற்காது என்றும் தெரிவித்திருந்தனர். அதேபோன்று ராஜபக்ஷவின் வருகையை கண்டித்து திருவள்ளுரில் ரயில் மறியல் செய்த சட்டக்கல்லூரி மாணவர்கள் பொலிஸா ரால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் இரயில் காலை 8.25 மணிக்கு திருவள்ளுர் ரெயில் நிலையம் வந்தது.

அப்போது திடீரென்று சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் ராஜபக்ஷவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய படி இரயிலை நோக்கி ஓடினார்கள். இரயில் என்ஜின் மீது ஏறி நின்றபடி ரெயிலை போகவிடாமல் மறித்ததுடன், ராஜபக்ஷவிற்கு அழைப்புவிடுத்த மோடிக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பியிருந்தார்கள். சர்வதேச விசாரணைக்கு மஹிந்த ராஜபக்ஷ ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, இல்லாவிட்டால் இலங்கை தூதரகத்தை மூடக்கோரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் பொலி சார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதோடு, இந்த போராட்டம் காரணமாக சுமார் 15 நிமிடங்கள் தாம தமாக இரயில் புறப்பட்டு சென்றது.

மோடியின் பதவியேற்பு விழா வில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கும் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் அணுகுமுறை முன்னுக்குப் பின் முர ணாகவே காணப்பட்டது. பின்னணியில் அமைச்சரவையில் பங்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி, வழக்கு களிலிருந்து தப்பிப்பது போன்ற பல்வேறு காரணங்கள் இருப்பதாக கருதப்பட்டது.ராஜபக்ஷவின் வருகை பற்றி கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞான தேசிகன், இலங்கையுடன் நட்புறவாக இருப்பதே இராஜதந்திரம் என்றார். ஆனால், அவரது நிலைப்பாட்டுக்கு எதிராக ராஜபக்‌சவை அழைத்திருப்பதை ஜி.கே.வாசன் கண்டித்திருந்தார்.

தி.மு.க.வும் மோடி பதவி யேற்பு விவகாரத்தில் மென்மையான போக்கையே வெளிப்படுத்தியது. வழக்கமாக இதுபோன்ற நேரங்களில், தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோவைக் கூட்டி போராட்டங்களை அறிவிக்கும் கருணாநிதி, தற்போது ‘ராஜபக்‌ஷ பங்கேற்க வேண்டுமா என்பதை, மத்திய அரசு மீண்டும் ஒருமுறை சிந்தித்து அந்த முயற்சியைக் கைவிடுமாறு வேண்டுகிறேன்’ என்று கூறி அறிக்கை விடுத்திருந்தார். பா.ஜ.க அரசு மீது தி.மு.க.வின் மென்மையான போக்குக்கு 2ஜி வழக்கும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ‘ராஜபக்‌ஷவை மட்டும் இந்த விழாவுக்கு அழைத்திருந்தால் தே.மு.தி.க பங்கேற்றிருக்காது,’ என்று கூறியதுடன், விழாவில் பங்கேற்பதை மறைமுகமாக உறுதி செய்திருந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தன் பங்குக்கு, ‘ராஜபக்‌ஷவை அழைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று மட்டும் கூறினார். இதன் மூலம், பதவியேற்பு விழாவை பா.ம.கவும் புறக்கணிக்காது என்பது தெளிவாகியிருந்தது. கடந்த 2008-ல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு விதிமீறி அனுமதி அளித்தது தொடர்பாக அவர் மீது சி.பி.ஐ வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், அவருக்கு அமைச்சரவையில் பதவி வழங்குவதை பா.ஜ.க இன்னும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில்தான் ராஜபக்ஷ விவகாரத்தில் நெருக்கடி கொடுக்க வேண்டாமென முடிவு செய்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
ம.தி.மு.கவைப் பொறுத்தவரை, வைகோவுக்கு ராஜ்யசபா பதவி கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், ராஜபக்‌ஷவின் வருகைக்கு எதிரான போராட்டத்தை வைகோ கையிலெடுத்தார். அதேநேரம் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும் வைகோ பதவியேற்பு விழாவில் பங்கெடுக்க மாட்டேன் என்ற முடிவினை எடுத்திருந்தார். இதன் விளைவாக தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பு என்னவென்றால், தமது அரசியலை நீண்டகாலம் கொண்டுசெல்வதற்கு இலங்கைத் தமிழ்மக்கள் தேவைப்படுகின்ற காரணத்தினால் முக்கியமாக பொறுத்த சந்தர்ப்பங்களில் இவ்வாறாக செயற்படுவது என்பது உலக நாடுகளுக்கு தமது ஆதரவு களை காட்டும் ஒரு செயற்பாடாகவே அமைகின்றது. காலங்காலமாக இந்திய அரசியலை உற்றுநோக்கும்பொழுது, தமது சுயநல அரசியலுக்காக தமி ழீழ மக்களை ஒரு பகடைக்காயாக பயன்படுத்துவார்களே தவிர, இதுவரை யிலும் உத்தியோகபூர்வமாக எதுவும் நடந்ததாகவில்லை.

2009ம் ஆண்டு புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக இலங்கையரசு கூறியது. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என கூறிக்கொண்ட அரசாங்கங்கள் அவர்களை தடைசெய்தது மட்டுமல்லாது விடுதலைப்புலிகளுடைய தடைச்சட்டத்தை நாடுகள் குறிவைத்துக் கொள்கின்றதே தவிர, விடுதலைப்புலிகள் ஒடுக்கப்பட்டுவிட்டார்கள் என்பதைத்தவிர பயங்கரவாதச் சட்டத்தை எந்தவொரு நாடும் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்தியா உதவி செய்யாவிட்டாலும் கூட உபத்திரவம் செய்யாதிருந்திருக்கலாம். ஆனால் இதுவரைகாலமும் இந்தியரசு உபத்திரவத்தையே கொடுத்துவந்துள்ளது. முள்ளிவாய்க்கால் அழிவின் போது இராணுவ தளங்களில் இறுதிப்போரில் நடந்தது என்னவென்பதை பார்வையிட்டுக்கொண்டு இருந்தார்களே தவிர, காப்பாற்றவேண்டும் என்கின்ற நோக்கம் அவர்களுக்கு இல்லை. இந்தியா பிரபாகரனை உயிருடன் பிடித்துத்தருமாறு ஒருகாலகட்டத்தில் இலங்கையரசிற்குத் தெரிவித்திருந்தது. ஆனால் இலங்கையரசோ அவரை கொன்றுவிட்டோம் என்கின்றனர். ஆனால் ஆய்வாளர்களின் கருத்தின்படி அவர் தப்பிச்சென்றுவிட்டார், ஏதோ வொரு நாட்டில் உயிர்வாழ்கின்றார் என பலவாறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகளை அல்லது தமிழ் மக்களை தற்பொழுது இருக்கின்ற மோடி அரசு ஆதரித்து அதற்கான தீர்வுத்திட்டத்தினை வழங்குவார்கள் என்பதனை எதிர்பார்க்கமுடியாது. இருந்தும் மனிதாபிமான முறையில் சிறிய நகர்வுத்திட்டங்களை இந்தியரசு செய்யக்கூடும். சீன, இந்தியாவின் நகர்வுகள் எவ்வாறு இலங்கையில் இருக்கின்றதோ அதனை வைத்து மோடி யின் அரசு சில முடிவுகளை எடுக்கலாம். தற்பொழுது சீன கொலனிகளாக மாறி வரும் இலங்கை, நல்லதொரு நிலையை அடையவேண்டுமாகவிருந்தால், அல் லது இந்தியாவிற்குச் சார்பாக அமையவேண்டுமாகவிருந்தால் நிச் சயமாக தமிழ்மக்கள் மீது அக்கறைகாட்டி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்ளங்களையும் வெற்றிகொண்டு, அதற்கான தீர்வுத்திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. அல்லாது போனால் மீண்டும் தமிழ் இளைஞர்களை ஆயுத போர்முனைக்குத் தூண்டிவிட்டு, அதில் சூடுகாயும் நடவடிக்கைகளை இந்தியரசு எடுத்துக்கொள்ளலாம்.

மன்மோகன்சிங்கின் ஆட்சியைப் பொறுத்தவரையில், ராஜீவ்காந்தியின் கொலையை வைத்து இலங்கைத் தமிழ்மக்களைப் பழிவாங்கினார்கள். மோடியினைப்பொறுத்தவரைக்கும் அந்தப் பிரச்சினை இல்லை. இருந்தும் ஒரு நாட்டுப்பற்றுதல் என்கின்ற காரணத் தினால் ராஜீவ் காந்தியின் கொலை யைத் தொடர்புபடுத்தி தமிழ்மக்களுக்கு தீர்வுத்திட்டத்தினை வழங்காது போக லாம். மாகாண சபைகள் நிறுவப்பட்டு அதனூடாக தமிழ்மக்களுக்கான தீர்வுகளை வழங்குவதே மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்காலத்திட்டமாக இருக்கின்றது. இதற்கு உடன்படாத அனைத்து அரசியல்வாதிகளும் ஓரங்கட்டப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மோடியின் அரசிற்கும், தற்போதைய மஹிந்தவின் அரசிற்கும் நல்லதொரு உடன்பாடு இருக்கின்றது. இதனை இரு அரசுகளும் இலாவக மாகப் பயன்படுத்திக்கொண்டு செயற்படுவார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் அனைத்துப் பொருளாதாரங்களும் இலங்கையில் தங்கியிருப்பதனால், மஹிந்த ராஜபக்ஷ கூறும் விடயங்களுக்கும் மோடி அவர்கள் தலையாட்டுவார்கள் என்பதும் தெளிவா கப் புலப்படுகின்றது. இவ்வாறான நிலை மைகள் காணப்படுமிடத்து, மோடி அவர்கள் எவ்வாறு தனது செயற்பாடுகளை முன்னெடுக்கப்போகின்றார் என்பதும் கேள்விக்குறியே.

– மறவன் –

SHARE