பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலையுடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் டயலாக் நிறுவனத்தன் தலைமை நிர்வாக அதிகாரி ஹான்ஸ் விஜயசூரியவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றுள்ள கையடக்கத் தொலைபேசி ஸிம் அட்டைகளில் பெருமளவிலான சிம் அட்டைகளை டயலாக் நிறுவனம் விநியோகித்துள்ளது.
குறித்த சிம் அட்டைகளுக்கான தொலைபேசி உரையாடல் தரவுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு டயலாக் நிறுவனத்திடம் கடந்த 2012 ஆம் ஆண்டு சம்பவம் நடைபெற்று சில தினங்களில் வேண்டுகோள் விடுத்திருந்த போதும், இதுவரை அந்த உரையாடல்களின் தரவுகள் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் மொபிடல் மற்றும் எடிசலாட் சிம் அட்டைகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த சிம் அட்டைகளுக்கான தொலைபேசி உரையாடல் தரவுகளை மொபிடல் மற்றும் எடிசலாட் நிறுவனங்கள் ஏற்கனவே குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில் குறித்த சிம் அட்டைகளுக்கான தொலைபேசி உரையாடல்கள் தரவுகள் அழிந்து போயுள்ளதால், தம்மால் அதனை ஒப்படைக்க முடியாதுள்ளதாக டயலாக் நிறுவனம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்துள்ளது.
மற்ற நிறுவனங்கள் இரண்டும் சம்பந்தப்பட்ட தரவுகளை வழங்கியுள்ள நிலையில், டயலாக் நிறுவனம் மாத்திரம் தரவுகளை வழங்காமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக வசீம் தஜுதீனின் படுகொலையுடன் தொடர்புள்ள பல முக்கியமான தகவல்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.
டயலாக் நிறுவனத்தன் தலைமை நிர்வாக அதிகாரி ஹான்ஸ் விஜயசூரியவின் மாமனாரான சுநிமல் பெனாண்டோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக கடமையாற்றியுள்ளார். அதேபோன்று ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் சுநிமல் பெனாண்டோ ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக உறவாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வசீம் தாஜுதீனின் படுகொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷவின் பெயரும் தொடர்புபட்டுள்ளது.
டயலாக் நிறுவனம் தமது தரவுகளை வழங்க மறுப்பது ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் சுநிமல் பெனாண்டோ ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துடன் பேணிவரும் நட்புறவா என்பது தொடர்பிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.