பிரஸல்ஸ் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சகோதரர்கள்

350

பிரஸல்ஸ் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்திலும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 34 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்ட காலித், பிராஹிம் எல் பக்ராவி ஆகிய இருவரும் குற்றப் பின்னணி கொண்ட சகோதரர்கள் என அந்நாட்டின் ஆர்டிபிஎப் அரசு வானொலி தெரிவித்துள்ளது.

காலித் பெல்ஜிய தலைநகர் பிரஸல்ஸில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்த அந்த வீட்டில் கடந்த வாரம்தான் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர் என்றும் அந்த செய்தித் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த வீட்டில் ஐ.எஸ். கொடி, சில துப்பாக்கிகள் மற்றும் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பாரிஸ் தாக்குதல் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சலா அப்டேஸ்லாமின் கைரேகை ஆகியன போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரஸல்ஸ் விமான நிலைய கேமராவில் பதிவான காட்சிகளில் காலிதும் அவரது சகோதரர் எல் பக்ராவியும் நடந்துவரும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

மூன்றாவது நபரான நஜீம் லாச்ரோவியை போலீஸார் தேடி வருகின்றனர்.

பிரசல்ஸ் தாக்குதல்: தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு, போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரின் சர்வதேச விமான நிலையத்தில் (ஜாவெண்டம் விமான நிலையம்) நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 12.30 மணி) அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. அதில் விமான நிலையம் குலுங்கியது. கட்டிடங்கள் சேதம் அடைந்தன. புகை மண்டலம் உருவானது. பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பதற்றத்தில் விமான நிலையத்தை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்தனர். விமான நிலையம் சுற்றி வளைக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த குண்டுவெடிப்புகளை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் ஐரோப்பிய நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள மேல்பீக் சுரங்க ரெயில் நிலையத்திலும் ஒரு குண்டு வெடித்தது.இந்த குண்டுவெடிப்புகளில் 31 பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் வெளியாகியுள்ளன. விமான நிலைய கேமராவில் பதிவாகியுள்ள படத்தில் 3 இளைஞர்கள் கை தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைவது பதிவாகியுள்ளது.படத்தில் வலது பக்கத்தில் இருப்பவன் தப்பி ஓடிவிட்டதாகவும் அவனை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

 

SHARE