பிரித்தானிய துணை தூதுவரை மன்னாரில் சந்தித்தார் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்

309
பிரித்தானிய துணை தூதுவர் லவ்றா டேவிஸ் இற்கும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்  இற்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நேற்று மன்னார் ஆகாஸ் ஹொட்டலில் இடம்பெற்றது.

இவ் விசேட சந்திப்பு தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், இந்த சந்திப்பானது அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அமைந்ததாகவும், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் அரசியல்கைதிகள், புனர்வாழ்வு பெற்ற போராளிகள், பிள்ளைகளை யுத்தத்தால் இழந்த குடும்பங்கள் தொடர்பாக உரையாடியதாகவும், மேற்படி நபர்களுக்கான வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தன்னால் ஏற்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெரியப்படுத்தியதோடு, இவ்வருடம் ஏறக்குறைய 860 குடும்பங்களையே தன்னால் ஒதுக்கப்பட்ட நிதியினூடாக ஓர் கணிசமான வருமானம் பெறக்கூடிய வகையில் சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும் எனவும், ஏனைய பதிவு செய்யப்பட்ட 11, 816 குடும்பங்களுக்கு இன்னமும் வாழ்வாதாரத்திட்டங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை எமக்கு காணப்படுவதாலும் இவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில்இருப்பதனாலும் இவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்ப்படுத்த மத்திய அரசு தரும் நிதி போதாது என்பதை தாம் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு மேற்படி குடும்பங்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு உதவித் திட்டத்துக்கான திட்ட முன்வரைபையும் பிரித்தானிய துணைதூதுவரிடம் தான் கையளித்துள்ளதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் அவர்மேற்படி திட்ட முன்வரைபுக்கான நிதி வளங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், இத்திட்டம் தொடர்பான வலுவான தனது சிபாரிசினை ஐரோப்பிய ஒன்றியத்திடம் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார் என்றும் அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்தார்.

SHARE