பிரி. வொல்வஹம்ப்டன் பல்கலை. தமிழ் மாணவர் ஒன்றியத்தின் உறவுகளுக்கு கை கொடுப்போம் நிகழ்வு

269

 

பிரித்தானிய வொல்வஹம்ப்டன் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் உறவுகளுக்கு கை கொடுப்போம் என்ற செயல் திட்டத்தை இரண்டாவது முறையாகவும் செயற்படுத்தியுள்ளார்கள்.

வொல்வஹம்ப்டன் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் இரண்டாவது வருடத்தின் ‘’உறவுகளுக்கு கை கொடுப்போம்” செயல் திட்டத்தின் நிகழ்வுகள் தை,மாசி மாதங்களில் இடம்பெற்றது.

இவ் உதவி ஒழுங்கமைப்புக்கு அமைவாக கடந்த மாத இறுதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரத்தில் அமைந்துள்ள மாவடி அம்மன் முன் பள்ளியினூடாக கல்வி முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பதற்காக ஆறு வசதி குறைந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அத்தோடு அந்த பிரதேசத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இரண்டு வசதி குறைந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகளை உற்சாகத்துடன் தொடரவேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு சிறு தொகை பணம் வழங்கி கௌரவிக்கப் பட்டது .

இதுமட்டுமல்லாது யாழ் மாவடத்தின் தென்மராட்சி பகுதியில் க.பொ .த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இரு வசதி குறைந்த மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு சிறு தொகை பணம் வழங்கப்பட்டது.

இவற்றுக்கு மேலதிகமாக கிளிநொச்சி விசுவமடு பகுதியில் அமைந்துள்ள கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயம் பல ஆண்டுகளாக மின்சார வசதியின்றி மாணவர்கள் கற்பதற்காக மிகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பாடசாலை சமூகமானது பலரிடம் உதவி கோரியும் அது கிடைக்காத பட்சத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பாடசாலைக்கான மின்சார இணைப்பிற்கு தேவையான நிதி உதவியை இலங்கை மின்சார சபைக்கு வொல்வஹம்ப்டன் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தினர் வழங்கி இன்று அப்பாடசாலைக்கு மின் இணைப்பை பெற்று கொடுத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் வொல்வஹம்ப்டன் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் தமது பல்கலைக்கழகத்தில் ஒன்றுகூடி அங்கே சிறிய அளவில் நிதியைத் திரட்டி; வசதி குறைந்த நிலையில் உள்ள தாயகத்து மாணவச் செல்வங்களுக்கு உதவி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE