கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி போன்ற விளையாட்டுகளை போல் பேட்மிண்டன் போட்டியிலும் லீக் தொடர் தொடங்கப்பட்டது. இதற்கு பிரீமியர் பேட்மிண்டன் லீக் எனப் பெயரிடப்பட்டது.
இதில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையும், உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சாய்னா நேவால் அவாதே வாரியர்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். அந்த அணி இவரை ஒரு லட்சம் டாலருக்கு ஏலம் எடுத்தது.
இந்நிலையில் பேட்மிண்டன் லீக் போட்டி இன்று தொடங்கியது. இன்றைய தொடக்க ஆட்டத்தில் மும்பை ராக்கெட்ஸ் அணிக்கெதிராக சாய்னா விளையாடுவதாக இருந்தது. ஆனால், காயம் காரணமாக கடைசி நேரத்தில் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சாய்னா நேவால் கூறுகையில் ‘‘கடந்த இரண்டு வாரங்களாக என்னுடைய கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்தால் நான் அவதிப்பட்டு வந்தேன். இது மிகவும் முக்கியமானது. அதில் இருந்து நான் மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். இது ஒலிம்பிக் ஆண்டு. ஆகவே, அதில் நான் பாதுகாப்பாக காயம் இல்லாமல் விளையாட விரும்புகிறேன்’’ என்றார்.