பிள்ளையானின் விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை எட்டியது! மேலும் நீடிப்பு

209

pillaiyan-300x194

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 19ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று புதன்கிழமை இவர்களை ஆஜர்படுத்திய போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 04 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த படுகொலை வழக்கு குறித்து சந்தேகநபரான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE