புங்குடுதீவு மாணவிக்கு நீதி கோரி நடைபெற்று வந்த அமைதிப் போராட்டங்களைக் களங்கப்படுத்தும் வகையில் வன்முறைகளைத் தூண்டி விடுவதில் சிலசக்திகள் ஈடுபட்டுள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இன்று 20.05.2015 காலை யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் புங்குடுதீவு மாணவிக்கு நீதிகோரி அமைதிவழிப் போராட்டத்திற்கு அணிதிரளுமாறு தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ் வணிகர் கழகம் மற்றும் பல்கலைக்கழக சமூகம், மாணவர், இளைஞர் அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்தன.
பெருமளவில் பலதுறைகளையும் சேர்ந்த அறிஞர்கள் மதகுருமார், ஆசிரியர்கள,; மாணவர்கள், பெண்கள் அணி திரண்டிருந்தனர். காலை 11.00மணியளவில் ஊர்வலங்கள் வந்தசேர்ந்தன.
அந்தவேளைகளில் அந்தபெருந்திரளான கூட்டத்தின் முன்னால் பலபேர் மோட்டார் கைக்கிள்களில் தீவிரவிசையுடன் சென்றதை அவதானித்து அச்சமடைந்தோம். உடன் தமிழர் ஆசிரியர் சங்கச் செயலாளர், மற்றும் யாழ் வர்த்தகசங்கத் தலைவரிடம் ஏற்படக்கூடிய விபரீதம் பற்றிக் கலந்துரையாடினோம்.
இந்த நீதிக்கான போராட்டத்தை முதல்நாளிலும் வன்முறைக்களமாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தமையையும் ஆராய்ந்தோம். பின் பொறுப்பானவர்களை ஒழுங்கைக் கடைப்பிடிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
வன்முறை நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுக்கும் நோக்கிலும் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளில் சிலசக்திகள் நடந்து கொள்வதை கட்டுபடுத்தும் வகையிலும் அமைதியான போராட்டம் நல்லெண்ணத்துடன் நடைபெற்ற பொழுதும் விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
நீதி கோரி அரசிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஆவணங்கள் அவசரமாக கையளிக்கப்பட்டது. பின்னர் சிலசக்திகள் யாழ் நீதிமன்றக் கட்டடத்தையும் வழக்கறிஞர்களையும், வாகனங்களையும் தாக்கியும் கல்லெறிந்தும் வன்முறைகளிலீடுபட்டதாக அறிந்தோம்.
பொலிசார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்துகலகச் சூழலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் அறிந்த பொழுது வேதனையடைகின்றோம்.
கைது செய்யப்பட்ட ஈனச்செயல் புரிந்த கொலையாளிகளைத் தங்கள் கைகளில் தரவேண்டுமென்று வன்முறையில் ஈடுபடுவது அந்த மாணவிக்கு அத்தகைய ஈனச்செயல்களுக்கு நீதி கிடைக்காமற் போவதற்கே இச்செயல்கள் இட்டுச் செல்ல முயற்சிக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுகின்றது.
இந்தநிலையில் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுபடுத்த பொலிசார் போதாதென்றும் இராணுவத்தை அழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதாகப் பொலிஸ்மா அதிபர் கருதுவதாக அறிந்து, எமது தலைவர் சம்பந்தன்,“இராணுவத்தை ஈடுபடுத்த வேண்டாம்” எனக் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக என்னுடன் தொடர்புகளை எற்படுத்தியுள்ளனர். நானும் இராணுவத்தை மீண்டும் மக்கள் மத்தியில் பாதுகாப்பு என்னும் பெயரில் அழைக்க வேண்டாமெனக் கேட்டுள்ளேன்.
நேற்று (19.05.2015) நண்பகல் 12.00 மணிக்கு அந்தமாணவியின் இல்லத்தில் தாயார் உறவினரைச் சந்திக்க நானும் கல்வியமைச்சர் உள்ளுராட்சிமன்றத் தலைவர்கள் சென்றிருந்தோம். அதற்கிடையில் புங்குடுதீவு சர்வோதய மண்டபத்தில் ஒருமக்கள் கூட்டம் நடைபெறுவதை அறிந்த அங்கு சென்றோம்.
அங்கு எம்மைச் சந்தித்த மக்கள் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சுவிசில் வாழும் குமார் என்பவர் கொழும்புக்கு தப்பிவிட்டதாகக் கூறினர். திரு.துவாரகேஸ்வரன் என்னிடம் வந்தார், குமார் என்பவர் பலாலி விமானத்தளத்திலிருந்து கொழும்பு செல்ல முயற்சிக்கிறார், இதைத் தடுத்து நிறுத்திக் கைது செய்ய வேண்டும். மண்டபத்தில் மூத்த பொலிஸ்மா அதிபர் நிற்கின்றார், நீங்களும் வாருங்கள் என அழைத்த போது தான் நானும் மண்டபத்துக்குள் சென்று பொலிஸ்மா அதிபரிடம் வாதாடினோம்.
சாட்சியமொன்றைத் தருமாறு கோரினார். துணைப் பொலிஸ்மா அதிபர்(DIG). அப்பொழுது ஒரு செய்தி வந்தது. அந்த குமார் என்பவர் கொழும்பில் நிற்பதாக வந்த செய்தி. அதை அறிந்தும் துவாரகேஸ்வரன் என்னுடன் ஆலோசித்து ஒருமுறைப்பாட்டை எழுதி துணை பொலிஸ் மா அதிபரிடம் கையளித்தார். சில நிமிடங்களில் துணை பொலிஸ் மா அதிபர் எம்மிடம் கூறினார் ,“கொழும்பில் அந்த நபர் கைது செய்யப்பட்டு விட்டார் என்றார்.
அவரை யாழ்ப்பாணத்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் என்று வாதாடினோம். அதற்கு பொலிஸ்மா அதிபர் உடன்பட்டார், அதுதான் நடைபெற்றது. உடன் துணைப் பொலிஸ்மா அதிபர் ஒலிபெருக்கியில் அவற்றை அறிவித்தார். இறுதியாக நானும் ஒலிபெருக்கியில் துணைப் பொலிஸ் மா அதிபர் எம்மிடம் கூறிய உறுதிமொழியை பகிரங்கமாக அறிவித்தேன். மக்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.
திரு.தமிழ்மாறனைக் கூட அந்த மண்டபத்திலே தான் கண்டோம். அவரிடம் என்ன நடைபெற்றது என விசாரித்தோம். பின்பு நாம் அனைவரும் அந்த மாணவியின் இல்லத்திற்குச் சென்று பெற்றோரிடம் பேசிச் சில விடயங்களை அறிந்து வந்தோம் மூன்று மணிக்கு யாழ் வந்து சேர்ந்தோம்.
இந்த சம்பவங்களை எல்லாம் மறைத்து விட்டு உண்மைக்கு மாறான செய்திகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளன. இதனையிட்டு மனம் வருந்துகிறோம். அங்கிருந்து திரும்பும் போது தெருக்களில் பல மோட்டார் வண்டிகளில் இளைஞர்கள் பலர் மிகத் தீவிரமாகச் செல்வதை அவதானித்தோம். அவர்கள் யாரென்று அறியமுடியவில்லை. இதைப்போன்று எங்கள் வாழ் நாளில் எத்தனையோ போராட்டங்களையும் பேரழிவுகளையும் அனுபவித்து விட்டோம்.
நன்றி உள்ள மக்களும் இளைஞர்களும், மாணவர்களும் அநீதிக்கெதிராக பேரெழுச்சி கொண்டு அணி திரண்டது எழுச்சியைத் தந்தது. ஆனால் இதனைப் பொறுக்காத உள்நோக்கங் கொண்ட சக்திகள் வன்முறையைத் தூண்டியும், ஈடுபட்டும் வருவது வேதனை தருகிறது.
எனவே அமைதி வழியில் நாழ் போராடுவோம் நீதிமன்றங்களை நீதி வழங்கி அக் கொலைகாரர்களுக்கு உச்சதண்டனை கிடைக்க வழிவகுப்போம். நீதிமன்றைக் கூடத் தாக்கும் வன்முறை வேண்டாம்.
வன்முறையில் ஈடுபட வேண்டாம் மீண்டும் ஒரு பேரழிவுக்கு இட்டுச் செல்ல யாருக்கம் இடமளிக்க வேண்டாம் என வேண்டுகிறோம்.
மாவை.சோ.சேனாதிராசா பா.உ
தலைவர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
துணைத் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு