புதிய தேசமொன்றை கட்டியெழுப்புவதற்காக கிடைத்த பெறுமதிமிக்க சந்தர்ப்பத்தை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக முயற்சிகளை மேற்கொள்ளும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
கட்சியைப் பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது எனவும், ஜனவரி 8ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியைப் பாதுகாப்பது மிக முக்கியமான விடயமாகும் எனவும் அறிக்கையொன்றின் மூலம் சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார். இதன்பிரகாரம் ஜனவரி 8 ஆம் திகதி நாட்டில் புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்காக பங்காற்றிய அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்துத் தரப்புகளினதும் பங்களிப்புடன் வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஜனவரி 8 ஆம் திகதி பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாக்க அர்ப்பணிப்பு செய்துள்ள சக்திகள் மற்றும் தலைமைதுவங்களுடன் சேருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து ஆதரவாளர்களிடமும் தாம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகார மோகத்தினாலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி சமூகத்தில் விஷம் கலக்கின்ற சக்திகளை தோற்கடித்தல் நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாததாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லாட்சி அரசொன்றை உருவாக்குவதற்காக ஜனவரி 8ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய பண்பாடுள்ள மக்கள் பிரதிநிகளை மாத்திரம் தெரிவு செய்வதற்கும் நாடாளுமன்றத்தை மக்களின் கௌரவமான அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற ஒரு நிறுவனமாக கட்டியெழுப்புவதற்கும் பொதுத் தேர்தலின்போது அனைத்து பிரஜைகளும் தமது வாக்குகளை புத்திசாதூரியத்துடன் பயன்படுத்தவேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கோரிக்கை விடுத்துள்ளார்.