புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகளை பேணும் வகையில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்ட வரைவு யோசனையொன்று சட்ட ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான சட்டத்தரணி நவீன் மாரப்பன சிங்கள பத்திரிகையொன்றுக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தேச திருத்தச்சட்டம் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வாவினால், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிடம் இந்த வாரத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசாரணைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாத வகையில் எமது நாட்டுக்கு பொருத்தமான வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தேச சட்ட வரைவுத் திட்ட யோசனை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்க ஆகியோரிடமும் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்ட திட்டங்கள் குறிப்பாக ஆசியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களை ஆராய்ந்து சட்ட மா அதிபர் மற்றும் சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான நவீன் மாரப்பன தெரிவித்துள்ளார்.