புலம்பெயர் சமூகம் ஈழக்கனவை கைவிடவில்லை – ஜனாதிபதி

215
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம், இன்னும் ஈழக் கனவை கைவிடவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களின் நினைவாக தெஹிவளையில் உருவாக்கப்பட்ட முதலாவது விசேட நீச்சல் தடாகத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்து உரையாற்றிய போதே அவரை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில், ‘தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டு பின்னர் வெளிநாடுளுக்கு சென்று தங்கியுள்ள புலம்பெயர் தமிழர்கள், இன்னமும் ஈழக்கனவை கைவிடவில்லை. இது இவ்வாறு இருக்கும்போது, அரசாங்கம் நாட்டை பிளவடையச் செய்வதாக சில தரப்பினர் பிழையான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், இராணுவத்தை மறுசீரமைக்குமாறு உலகின் எந்தவொரு நாடும் இலங்கைக்கு அழுத்தங்களையோ அல்லது யோசனைகளையோ முன்வைக்கவில்லை. அதேபோன்று இராணுவத்தை மறுசீரமைக்குமாறு எந்தவொரு நாடும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது’ என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யுத்த காலத்தில் இலங்கையின் இராணுவத்தினர் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ள அதேவேளை, இராணுவத்திற்கு அதிகளவானவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், ஜனாதிபதி இக்கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE