புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் லண்டன் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? : அம்பலமாகியது ரகசியம்

342

 

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் அண்மையில் லண்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து, பலவாறாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது அங்கு முக்கியமாக பேசப்பட்ட விடங்கள் தொடர்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

hqdefault iti-london-meeting

அதாவது 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு இந்த ஆண்டின் இறுதியில் நடைமுறைப்படுத்தப்படுமென, இதன்போது புலம்பெயர் அமைப்புகளுக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பான யோசனைகள் இலங்கையின் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டதும், அதில் சமர்ப்பிக்கப்படுமெனவும் அங்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஆம் திருத்தம் குறித்த புதிய யோசனையில், வடக்கு கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர்கள் இருவருக்கும் பொதுவாக மத்திய அரசில் அமைச்சர் ஒருவர் பதவி வகிப்பாரெனவும், குறித்த அமைச்சுப் பதவி தமிழர் ஒருவருக்கே வழங்கப்படுமெனவும், அவரிடமே 13ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அமைச்சருடன், இரண்டு மாகாணங்களின் முதலமைச்சர்களும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தமக்கான அதிகாரங்களை பெற்றுக்கொள்ளலாமென புலம்பெயர் அமைப்புகளிடம், மங்கள விளக்கியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரி இதற்கு உடன்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இலங்கையில் பிரதமர் ரணில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்தே, அடுத்த நகர்வாக லண்டனில் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

லண்டனில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் பல சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், அங்கு தமிழர்களின் உடனடி தேவை குறித்து மாத்திரமே கலந்துரையாடப்பட்டதாக குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

அத்துடன் இப்பேச்சுவார்த்தை அறிவிக்கப்படாமல், சில அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் நடத்தப்பட்டதாகவும், தமிழர்களின் தேவைகள் குறித்து வேறு ஒரு நாட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த அவசியம் இல்லையென்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டு வந்தது.

இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில், தற்போது அங்கு பேசப்பட்ட விடயங்கள் வெளியாகியுள்ளமை அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE