புலிகளின் முதுகெலும்பை முறிக்க:இலங்கைக்கு வழங்கிய போர்க்கப்பலை இந்தியா மீளப் பெற்றுக்கொண்டது ஏன்……….

367

 

“…………….கடந்த 29 மாதங்களாக கடற்படையில் “சயுரால” என்ற பெயருடன் இணைக்கப்பட்டிருந்த இந்தப் போர்க்கப்பல் திடீரென இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து இந்தப் போர்க்கப்பலை இந்தியா மீளப் பெற்றுள்ளது. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை கடற்படையின் வெற்றியை இந்தியா அவசியமானதாகக் கருதியது. அதற்காக மூன்று போர்க் கப்பல்களை அனுப்பியது. ஆனால் இப்போது புலிகள் ஒடுக்கப்பட்டு விட்டதால் இந்தியாவுக்கு இந்தக் கப்பல்கள் மீளத் தேவைப்பட்டிக்கின்றன. வழங்கிய கப்பல்களை இந்தியா மீளப் பெறுவது இலங்கை கடற்படைக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற செய்தியாக இருக்க முடியாது. ஏனென்றால் இன்னும் பல போர்க்கப்பல்களுடன் இலங்கையின் பொருளாதார கடல் எல்லையைப் பலப்படுத்தும் திட்டத்தை அது கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இந்தியா தான் வழங்கிய போர்க்கப்பல்களை மீளப் பெறுவதை இலங்கை நிச்சயம் வரவேற்காது………………”

இனி,

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக் கடற்படைக்கு இந்தியா வழங்கிய போர்க்கப்பல்கள் முக்கிய பங்கு வகித்திருந்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொள்வதற்கு அவர்களுக்கான கடல்வழி விநியோகங்களைத் தடுக்க வேண்டியது அவசியம் என்று 3ம் கட்ட ஈழப்போரிலேயே உணரப்பட்டது. இதனால் கடல் முற்றுகையைத் தீவிரப்படுத்தி கடற்புலிகளின் விநியோகங்களைத் தடுப்பதற்காக இலங்கைக் கடற்படை ஒரு நடவடிக்கையை ஆரம்பித்தது. போர்நிறுத்தத்துக்கு முந்திய காலகட்டத்தில் தான் “ஒப்பரேசன் வருண கிரண” என்ற பெயரில் இலங்கைக் கடற்படை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அது போரின் முடிவு வரைக்கும் நீடித்தது.
2000ம் ஆண்டு இலங்கைப் படைகள் புலிகளின் தீவிரமான தாக்குதல்களை எதிர்கொண்டிருந்த கட்டத்தில் இந்தியா ஒரு போர்க்கப்பலை கடற்படைக்கு வழங்கியது. அதுவே “சயுர” (பி620) என்ற பெயரில் இயங்குகிறது. இதுதான் “வருண கிரண” நடவடிக்கைக்கான மூலதனமாக இருந்தது. ஆழ்கடல் ரோந்துக் கப்பலான “சயுர”வும், இஸ்ரேலிய ஏவுகணைப் போர்க்கப்பல்களான “நந்திமித்ர”, “சுரனிமல” போன்றனவும் இணைந்தே முல்லைத்தீவை மையப்படுத்தி கிழக்கு கடற்பரப்பில் “வருண கிரண” நடவடிக்கையை ஆரம்பித்தன.

இந்தியா முதலில் வழங்கிய “சயுர” என்ற போர்க்கப்பல் “சுகன்யா” வகையைச் சார்ந்தது. 2000 நவம்பர் 1ம் திகதி இது இலங்கைக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக இது குத்தகைக்கு வாங்கப்பட்டதாக இந்தியா கூறியது பின்னர் அது விற்கப்பட்டதாக கூறியது. இந்தப் போர்க்கப்பலை வைத்துக் கொண்டே கிழக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை மூழ்கடித்தது.

அடுத்தடுத்து பல ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதற்கு இந்தப் போர்க்கப்பலின் பங்களிப்பு அபரிமிதமானது என்றால் மிகையாகாது.
நான்காவது கட்ட ஈழப்போர் தொடங்குவதற்கு முன்னரே சமாதான காலத்தில் புலிகளின் கப்பல்களில் இரண்டு மூழ்கடிக்கப்பட்ட போதும், கடற்புலிகள் வேறு வழிகளில் ஆயுதங்களைக் கடத்தியே வந்தனர். அவர்கள் தெற்கு கடற்பரப்பையும், மேற்கு கடற்பரப்பையும் தமது ஆயுத விநியோகங்களுக்கான பாதையாக மாற்றினர்.
இந்தக் கட்டத்தில் நான்காவது கட்ட ஈழப்போர் தொடங்கியது.
அப்போது கடல்வழி விநியோகங்கள் முழுமையாகத் தடுக்க வேண்டிய தேவை இருந்தது. அதைச் செய்தால் தான் புலிகளின் முதுகெலும்பை முறிக்கலாம் என்று இலங்கை அரசு கருதியது.

அதற்கு உதவ இந்தியாவும் முன்வந்தது.

அமெரிக்கா போன்ற நாடுகளும் முன்வந்தன.

அமெரிக்கா புலனாய்வுத் தகவல்களை வழங்கியது.

ஆயுதக்கப்பல்கள் புறப்படுகின்ற செய்தி, அதன் பாதையை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியது.

இந்தியாவோ இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சந்தேகத்துக்கிடமான கப்பல்களின் நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் ஆயுதக்கப்பல்கள் இலங்கையை நெருங்கும் வரை காத்திருந்த கடற்படையினர் அவற்றைத் தாக்கி அழிக்க ஆரம்பித்தனர்.

பின்னர் அவர்கள் தமது திட்டத்தை மாற்றிக் கொண்டனர்.
ஆயுதக்கப்பல்கள் இலங்கையை நெருங்க முன்னரே – அதாவது சுமாத்ரா கடற்பரப்பில் வைத்து அவற்றை அழிக்கத் திட்டமிட்டனர். இலங்கையில் இருந்து சுமார் ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு கிலோ மீற்றர் தொலைவு வரை தேடிச் சென்று அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நான்காவது கட்ட ஈழப்போர் தொடங்கிய பின்னர், 2007ம் ஆண்டில் கடற்புலிகளின் ஆயுத விநியோக வழிகளை அடைப்பதற்காக இந்தியா மற்றொரு போர்க்கப்பலை வழங்கியது.
“விக்ரம்” வகையைச் சேர்ந்த இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் “வரஹா” என்ற பெயரில் இந்திய கடலோரக் காவல் படையில் இருந்தது.

இதுவும் “சுகன்யா” ரகத்தைச் சேர்ந்த “சயுர”வைப் போன்று 22 நொட்ஸ் வேகத்தில் செல்லக் கூடியதாக இருந்தாலும் நீளமும், எடையும் சற்றுக் குறைந்தது.

இதுவும் கடற்புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.

பின்னர் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது கடல் முற்றுகையை மேலும் இறுக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒன்றுக்கு இரண்டு வேலைகளைக் கடற்படை செய்ய வேண்டியிருந்தது.

கடல்வழியாக வன்னியில் இருந்த புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்க வேண்டும்.

அது முதலாவது வேலை.

இரண்டாவது போர் இடம்பெறும் பிரதேசம் சுருங்கச் சுருங்க புலிகளின் முக்கிய தலைவர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும்.

இதற்காக கடற்படை பல சுற்றுப்பாதுகாப்பு வளையங்களை அமைத்தது.

சிறிய “அரோ” வகைப் படகுகளை முதல் வளையத்தில் நிறுத்தியது.

அதற்கடுத்து கரையோர ரோந்துப் படகுகள், அதிவேகத் தாக்குதல் படகுகள், பீரங்கிப் படகுகள் அதற்கடுத்து ஆழ்கடல் ரோந்துப் படகுகள் நிறுத்தப்பட்டன.

இந்தக் கட்டத்தில் கடைசி வளைத்தில் கண்காணிப்பை மேலும் அதிகமாக்க வேண்டிய தேவை இருந்தது.

அந்தக்கால கட்டத்தில் கடற்புலிகளிடம் சில நீர்மூழ்கிப் படகுகளும், விமானங்களும் இருப்பது உறுதியாகத் தெரிந்தது.

இந்தநிலையில் அவற்றைக் கொண்டு ஆழ்கடல் பரப்புக்குத் தப்பிச் செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது.

எனவே ஆழ்கடல் கண்காணிப்பை மேலும் நெருக்கமாகப் பேண வேண்டிய தேவை இருந்தது.

இதற்காக இந்தியா மேலும் ஒரு ஆழ்கடல் ரோந்துக் கப்பலை இலங்கைக்கு வழங்கியது.

இந்திய கடலோரக் காவல்படையில் “விக்ரஹா” என்ற பெயரில் இடம்பெற்றிருந்த கப்பல் இலங்கை கடற்படையிடம் கையளிக்கப்பட்டது.

2008 ஓகஸ்ட் 23ம் திகதி இது இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கு பி 623 என்று இலக்கமிடப்பட்டு போர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது.
பொதுவாக ஒரு கப்பலை வாங்கியவுடன் அதை ஒரு துறைமுகத்தில் வைத்தே இணைத்துக் கொள்வது வழக்கம். அப்படி ஏதேனும் செய்யாமலேயே இந்தியாவிடம் வாங்கிய “சயுரால” நேரடியாகவே படை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. அதற்கு வெறுமனே பி 623 என்று மட்டும் இலக்கமிடப்பட்டது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், சரியாக இந்தக் கப்பலை வாங்கி ஒரு வருடம் கழித்து 2009 ஓகஸ்ட் 28ம் திகதி பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஸ இதை திருகோணமலை கடற்படைத்தளத்தில் வைத்து அதிகாரபூர்வமாக கடற்படையில் இணைத்தார்.

அதன்போதே இதற்கு “சயுரால” என்று பெயரிடப்பட்டது. இதுவும் “சாகர” போன்று “விக்ரம்” வகையைச் சேர்ந்ததே. இந்தக் கப்பலின் இணைப்பு விழா திருகோணமலையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றிருந்தது. இது திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்து கடல்முற்றுகை மற்றும் ஆழ்கடல் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது.
கடந்த 29 மாதங்களாக கடற்படையில் “சயுரால” என்ற பெயருடன் இணைக்கப்பட்டிருந்த இந்தப் போர்க்கப்பல் திடீரென இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து இந்தப் போர்க்கப்பலை இந்தியா மீளப் பெற்றுள்ளது.

கடந்த மாதம் 23ம் திகதி கொச்சி கடற்படைத் தளத்தில் இந்தக் கப்பல் அதிகாரபூர்வமாக இந்திய கடலோரக் காவல்படையிடம் கையளிக்கப்பட்டது.

கடற்படையின் மேற்குப் பிராந்தியத் தளபதி றியர் அட்மிரல் தமயந்த தர்மசிறிவர்த்தன இந்தப் போர்க்கப்பலை இந்திய கடலோரக் காவல்படையின் மேற்குப் பிராந்தியத் தளபதி பஸ்ராவிடம் கையளித்தார்.
திடீரென இந்தியா இந்தக் கப்பலை எதற்காக மீளப் பெற்றது என்ற கேள்விகள் உள்ளன.

மீள ஒப்படைக்க வேண்டிய ஒரு போர்க்கப்பலுக்காக திருகோணமலையில் பாதுகாப்பு செயலர் தலைமையில் ஒரு பெருமெடுப்பிலான நிகழ்வு நடத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை.

அதேவேளை இந்தியா வழங்கிய மற்றக் கப்பலான “சாகர” தற்போது கொல்கத்தாவில் பழுதுபார்க்கப்பட்டு வருகிறது. அதுவும் இலங்கை கடற்படையிடம் மீள வழங்கப்படும் என்றே கூறப்பட்டது.

ஆனால இப்போது அதைப் பற்றி எந்தத் தெளிவான தகவலும் இல்லை.

புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை கடற்படையின் வெற்றியை இந்தியா அவசியமானதாகக் கருதியது.
அதற்காக மூன்று போர்க் கப்பல்களை அனுப்பியது.

ஆனால் இப்போது புலிகள் ஒடுக்கப்பட்டு விட்டதால் இந்தியாவுக்கு இந்தக் கப்பல்கள் மீளத் தேவைப்பட்டிக்கின்றன.

வழங்கிய கப்பல்களை இந்தியா மீளப் பெறுவது இலங்கை கடற்படைக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற செய்தியாக இருக்க முடியாது.

ஏனென்றால் இன்னும் பல போர்க்கப்பல்களுடன் இலங்கையின் பொருளாதார கடல் எல்லையைப் பலப்படுத்தும் திட்டத்தை அது கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் இந்தியா தான் வழங்கிய போர்க்கப்பல்களை மீளப் பெறுவதை இலங்கை நிச்சயம் வரவேற்காது.

கட்டுரையாளர் சுபத்ரா

SHARE