புலிகளை முழுமையாக அழிக்க திட்டமிட்டோம்.

280

Sarath_Fonseka

 

யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாக முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டையும் மூவின மக்களையும் பாதுகாக்கும் நோக்கில் அந்த முடிவுக்கு தாம் வந்திருந்ததாகவும் புலிகளை முழுமையாக அழிக்க திட்டமிட்டது உண்மையே என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று பயங்கரவாதம் உருவாகும் சூழல் இல்லை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அதனால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் இனியும் மௌனம் காப்பது நல்லதல்ல என்று சரத்பொன்சேகா தெரிவித்தார்.

அரசாங்கம் இனியும் மௌனம் காத்தால் தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும்“ இடையில் பாரிய விரிசல் ஏற்படும் என்றும் சரத்பொன்சேகா எச்சரித்துள்ளார். சமதான சூழலில் கைதிகளை சிறைப்பிடிப்பது அர்த்தமற்றது என்றும் கூறியுள்ளார்.

தமிழ் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற கருத்தை தான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதேவேளை யுத்த காலத்தில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் பல்லாயிரம் பேரை வடக்கில் கைது செய்ததாகவும் அதேபோல புலிகளுடன் தொடர்புடைய ஆயுதம் ஏந்திப் போராடிய நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

நேரடியாக ஆயுதம் ஏந்திப் போராடிய 12ஆயிரம் பேர் மகிந்த ராஜபக்ச காலத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை இன்னமும் தடுத்து வைத்திருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்கள் அரசாங்கம்மீது நல்ல நம்பிக்கையை கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்த அவர் அந்த நம்பிக்கையை அரசாங்கம் பாதுகாக்காவிடில் நிலமை மோசமாகலாம் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை புலம்பெயர் அமைப்புக்கள்மீதான தடையை நீக்கியமையால் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படலாம் என்று தெரிவித்த அவர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

SHARE