பெங்களூர் பிரச்சார கூட்டத்தில் தவறாகத் தீண்டிய நபரை நடிகை குஷ்பு கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து நடிகையும் காங்கிரஸ் பேச்சாளருமான குஷ்பு நேற்று பெங்களூருவில் உள்ள இந்திரா நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதன் போது, மோடியின் ஆட்சியால்ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வால் குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கின்றனர். எரிவாயுவின் விலை அதிகரித்துவிட்டது. பொதுவாக பெண்கள் சமையல் அறையில் பணத்தை சேமித்து வைப்பார்கள்.
இவ்வாறு சேமிக்கும் பணத்தைக் கொண்டு குடும்பத்தின் எதிர்பாராத தேவையைப் பூர்த்தி செய்வார்கள். ஆனால் மோடி ஒரேநாள் இரவில் பணமதிப்பு நீக்கத்தை அறிவித்ததன் மூலம் பெண்களின் சேமிப்பை இல்லாமல் செய்துவிட்டார். 500, 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாது என அறிவித்த பிறகு, ஏடி.எம். வாசலில் காத்திருந்த 100-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்தனர்.
பிரச்சாரத்தை முடித்துவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கிய குஷ்பு தனது காரை நோக்கி நடந்தார். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜோர்ஜ், ஹாரீஷ் உட்பட ஏராளமானோர் குஷ்புவை பின்தொடர்ந்து வந்தனர்.
அப்போது ஒருவர் குஷ்புவை தவறாகத் தீண்டியதால் ஆத்திரமடைந்த அவர், அந்த நபரின் கன்னத்தில் அறைந்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் அந்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் குஷ்பு தெரிவிக்கையில், “அந்த நபர் முதல் முறை என்னை தவறாகத் தீண்டினார். ஏதோ தெரியாமல் செய்கிறார் என கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். இரண்டாம் முறையும் அவ்வாறு செய்ததால் கோபத்தில் அவரை அறைந்தேன்” என்று தெரிவித்தார். அந்த நபரை குஷ்பு அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.