பெண்ணொருவர் முதலமைச்சரிடம் உருக்கமான வேண்டுகோள்! என் கணவரை மீட்டுத்தாருங்கள்!

438
என் கணவர் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டார். ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார், எங்களிடம் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம். என் கணவரை மீட்டுத்தாரு ங்கள் என யாழ். தொண்டமனாறு பகுதியில் தாய் ஒருவர் வடமாகாண முதலமைச்சரிடம் உருக்கமான வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் மேற்படி பகுதியில் மாகாண நீர் ஆராய்ச்சி மையம் திறப்பு விழாவின் போது வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லின கோழிக் குஞ்சுகளும் வடமாகாண கால் நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டன.

இதன்போது கோழிக் குஞ்சு பெறவந்த தாய் ஒருவரே இந்த வேண்டுகோளை விடுத்தார்.

முதலமைச்சரிடம் கோழிக் குஞ்சுகளைப் பெற்றுக் கொண்ட குறித்த தாய், ஐயா..! உங்களோடு 2 நிமிடம் பேசலாமா? என கேட்டார். அதற்கு முதலமைச்சர் பேசுங்கள் என கூறினார்.

அதற்குப் பின்னர் முதலமைச்சரோடு பேசிய தாய் என் கணவரை கடத்திச் சென்றுவிட்டார்கள். அதன் பின்னர் அவரை பல இடங்களில் தேடினோம். இன்றும் தேடிக்கொண்டேயிருக்கிறோம்.

ஆனால் என் கணவரைக் காணவில்லை. ஆனால் அவர் உயிரோடு இருக்கின்றார். எங்களிடம் வருவார் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையில் நான் பொட்டும் வைத்துக் கொண்டு இருக்கிறேன்.

எனக்கு வாழ்வாதார உதவி வழங்குவதற்கும் மேல் என் கணவரை மீட்டுத்தாருங்கள்.

நீங்கள் என் தந்தைபோல் இருக்கிறீர்கள். என் கணவரை மீட்டுத் தாருங்கள் என கண்கள் கலங்க உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்.

 

SHARE