கடந்த வாரம் புத்தளம் தில்லையடி முஹாஜிரின் அரபுக்கலூரிக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் யுத்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை அங்கு சந்தித்து அவர்களோடு உரையாடினார். அவ்வேளை அவ் அரபுக்கலூரியின் ஸ்தாபகப் பணிப்பாளர் எஸ்.எச்.எம்.எ.முபாறக் அவர்களையும், வட மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் அவர்களையும், விவசாய விசேட பாட உத்தியோகத்தர் எச்.எஸ்.அபூசாலி ஆகியோருடன் தமது கருத்துக்களை பகிர்ந்துகொள்கையில், இவ்வாறு இக் கலூரியின் மூலம் எதிர்கால சிறார்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை கற்றுக்கொடுப்பதோடு, ஒழுக்க நெறிகளையும் வழங்குவதை தாம் பாராட்டுவதாகவும் தெரிவித்ததோடு,
அங்குள்ள மன்னார் மாவட்டத்திலிருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை விரைவாக மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியமருமாறும் தாம் அழைப்பதாகவும் தமது காலத்தில் தாம் வடக்கு மாகாணத்தின் அனைத்து மக்களுக்கும் இனம் என்பதை கடந்து நாம் அனைவரும் வடக்கு மக்கள் என்னும் ஓர் பார்வையிலே சேவையாற்றுவதாகவும், வெறுமனே பேச்சில் மட்டுமல்ல இன ஒற்றுமை என்பது அது நமது செயல்ப்பாட்டிலும் இருக்கவேண்டும் என்பதே தமது எண்ணம் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.