போதைப் பொருள் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பெண் மண்டியிட்டு நீதிபதிக்கு வணக்கம்

292
போதைப் பொருள் தொடர்பான வழக்கொன்றிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பெண்ணொருவர் நீதிமன்றத்தில் மண்டியிட்டு நீதிபதியை வணங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரியவுக்கே இவ்வாறு பெண்ணொருவர் மண்டியிட்டு வணங்கி தனது கௌரவத்தை வெளிக்காட்டியுள்ளார்.

குறித்த பெண்ணின் மார்புக் கச்சைக்குள் மறைக்கப்பட்டிருந்த நிலையில் 27 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக குற்றத் தடுப்பு பொலிசார் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

எனினும் அவரைக் கைது செய்திருந்த பொலிஸ் குழுவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் குறித்த பெண்ணின் கடையில் இருந்த அரிசிச்  சாக்குப் பை ஒன்றுக்குள்ளிருந்து ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டிருந்த பெண்ணின் வழக்கறிஞர் இது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார். இதனையடுத்து சாட்சிகள் பரஸ்பர விரோதமாக இருப்பதை கவனத்தில் கொண்ட நீதிபதி லலித் ஜயசூரிய குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை இன்று வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மண்டியிட்டு நிலத்தில் அமர்ந்த அப்பெண்மணி நீதிபதியை நோக்கி கைகளை உயர்த்தி வணக்கம் தெரிவித்து தனது கௌரவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பொதுவாக இரண்டு கிராம்களுக்கு அதிகமாக போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது வழக்கமாகும்.

1313

SHARE