இன்று மது ஒழிப்பு நாளை முன்னிட்டு முல்லைத்தீவில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஊர்வலத்தில் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இன்று நம் தமிழர் தேசத்தில் பெரும்பாலான மாணவர்களும், இளைஞர்களும் மது பாவனைக்கு அடிமையாகி கலாச்சார சீரழிவுகளையும், கல்வி விழுமியங்களையும் சிதைக்கும் நடவடிக்கைகளை செய்வதற்கு தூண்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு இராணுவ புலனாய்வாளர்களும் மாணவர்களையும், இளைஞர்களையும் வேண்டுமென்றே மது பாவனைக்கு அடிமையாக்கி வருகின்றனர்.
எனவே இன்று மது ஒழிப்பு நாளை முன்னிட்டு நடைபெறும் கவனயீர்ப்பு ஊர்வலத்தினூடாக எமது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மது பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி எமது தமிழர் தேசத்தில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்தி எமது தமிழர் தேசத்தை வளம் மிக்கதொரு சமுதாயமாக மாற்றுவதற்கு மாணவர்களும், இளைஞர்களும் முன்வரவேண்டுமென்று கருத்து தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் போதை பொருள் பாவனை என்னும் சாக்கடை கடலுக்குள் மாணவாகள் தம்மை அறியாமலேயே விழுத்தப்படுகின்றனர். போதைவஸ்து வியாபாரிகள் தமது வியாபாரத்துக்கான இலகு களமாக பாடசாலை மாணவர்களை பாவிக்கிறார்கள்.
எனவே மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். மாணவர்களே எதிர்கால சந்ததியின் சொத்து. எனவே அவர்களை களங்கமற்றவர்களாக வளர்க்கப்படவேண்டிய பொறுப்பு எமது இன்றைய சமுதாயத்தின் சவாலாக மாறியுள்ளது என தெரிவித்தார்.